எனக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க, வடக்கு மக்களுக்கு முடியவில்லை - ராஜித
கடந்த அரசாங்கம் மனிதவள செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தாம் கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டபோது அதிவேக வீதிகளையும் விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அமைத்த போதிலும் மக்களுக்கான வீடுகளை அமைக்க முடியாமற்போனதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியாமற்போனமையை வடக்கின் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டினார்.
வட பகுதிக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை செலவிட்டு, அதிவேக வீதிகளை அமைத்தாலும் அப்பகுதி மக்களுக்கு அதில் நடந்து செல்லவே முடிந்ததாகவும் சைக்கிளேனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
தாம் வடக்கின் கிராமங்களுக்கு சென்றிருந்த வேளையில், தமக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க அம்மக்களுக்கு முடியவில்லை என சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், அங்கு உட்கார்ந்து சாப்பிட கதிரை, மேசைகள் கூட இருக்கவில்லை என குறிப்பிட்டார்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அப்பாவி தமிழ் மக்களுடன் தான் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வந்ததாகவும், விமான நிலையங்கள், துறைமுகங்களை அமைப்பதை விடுத்து மனித வளத்தை மேம்படுத்துவது குறித்து தற்போது தாம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தாதியர் சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் 1300 தாதியர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இந்த நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது.
Post a Comment