Header Ads



அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி

-ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி-  

அனஸ் இப்னு நள்ரு (ரளியல்லாஹு அன்ஹு) என்பது அவருடைய பெயர். மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர். இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும். ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே இருந்தது. பத்ருப் போரில் கலந்து கொள்ளாததை மிகப்பெரிய இழப்பாக அவர் கருதினார்.

''எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இறைநம்பிக்கை எப்படிப்பட்டது என்று கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவேன்'' என்று அவர் அடிக்அடி கூறுவது வழக்கம்! இப்படிப்பட்ட நேரத்தில்தான் உஹதுப் போருக்கான அழைப்பு வந்தது. முஸ்லிம்கள் எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானார்கள். அனஸ் இப்னு நள்ரு ரளியல்லாஹு அன்ஹுஅவர்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். அவரும் ஸஅது இப்னு அபி வக்காஸ்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களும் ஒன்றாகச் சேர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் எதிரிகளோடு முஸ்லிம்கள் மோதிக் கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த அனஸ் ரளியல்லாஹு அன்ஹுசட்டென்று நின்றார்.

''ஸஅத்! சொர்க்கத்தின் வாசம் வீசுகின்றதா? சொர்க்கத்தின் வாசத்தை நீ உணரவில்லையா?''

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ன சொல்கிறார் என்று ஸஅது ரளியல்லாஹு அன்ஹுக்கு உடனே புரியவில்லை.

''அதோ! உஹது மலைக்குப் பின்னால் இருந்து சொர்க்கத்தின் வாசம் வீசுவதை நான் உணர்கிறேன்!'' என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹுகூறினார். கூறியவர் அங்கேயே வெறுமனே நின்று கொண்டிருக்கவில்லை. தன்னுடைய வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் பாய்ந்துவிட்டார். எதிரிகளோடு மிகவும் வீரதீரத்தோடு போரிட்டார்.இவ'ரைப் போல இன்னொரு வீரர் யார் இருக்க முடியும்?'' என்று எல்லோரையும் கேட்க வைத்தார்.

ஷஹீதாகத் தயாரானவர்தானே சொர்க்கத்திற்கு ஆசைப்பட முடியும்?

ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா?

இன்றைக்கு யார்யாரையோ ஷஹீத் என்று சொல்லி விடுகிறார்கள்.அவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஷஹீத்கள்தானா என்பதை இறைவன் தான் அறிவான். இஸ்லாமுக்காக வாழத் துணிந்தவன் தான் சாகவும் துணிவான்.

அல்லாஹ் காட்டிய வழிமுறைகளின்படி வாழ்ந்து காட்டுபவனால்தான் அல்லாஹ் கூறிய முறைப்படி சாகவும் முடியும். எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்த அனஸ் இப்னு நள்ரு ரளியல்லாஹு அன்ஹுஅவர்களின் உடலில் ஏராளமான காயங்கள் ஏற்பட்டன. எதிரிப்படை வீரர்கள் பலபேரை அவர் வீழ்த்தினார். அவருடைய உடல் எங்கும் காயங்கள்: காயங்கள்! ஒன்றுஅல்ல, இரண்டுஅல்ல, என்பத்தி இரண்டு காயங்கள் அவருடைய உடலில் இருந்தன. அவருடைய உடல் தளர்ந்தது: உயிர்மூச்சு ஓய்ந்தது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் போர் முடிந்துவிட்டது.

இஸ்லாமுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்கள் எல்லாம் ஷஹீதுகளாக கீழே வீழ்ந்து கிடக்கிறார்கள். தன்னுடைய சகோதரனுடைய நிலை என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று கவலையோடு அனஸ் இப்னு நள்ரு ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய சகோதரி ருபய்யிஃ போர்க்களத்திற்கே வந்துவிட்டார்.

ஒவ்வொரு சடலமாக பார்த்துக் கொண்டே வருகிறார். அனஸைக் காணவில்லை. மீண்டும் உன்னிப்பாக ஒவ்வொரு சடலத்தையும் பார்க்கிறார்.

அனஸ் எங்கே விழுந்து கிடக்கிறார் என்றே அடையாளம் தெரியவில்லை. ஓரிடத்தில் உயிரற்ற உடல் ஒன்று கிடக்கின்றது.

பார்த்தால் அனஸ் போலவே தெரிகின்றது. ஆனால், முகம் முழுக்க வெட்டுக் காயங்கள். ஆள் யார் என்றே அடையாளம் சொல்ல முடியாது. அனஸ்தான் இது என்று அவருடைய உள் உணர்வு சொல்கின்றது.

அந்த உடலின் கைகளைத் திருப்பிப் பார்த்தார். அல்லாஹுஅக்பர்!! ஆம், அனஸ் இப்னு நள்ரு ரளியல்லாஹு அன்ஹுஅவர்களேதான் இது!!

அனஸ் ஷஹீதாகிவிட்டார். அனஸ் வெற்றி பெற்றுவிட்டார். அனஸ் அல்லாஹ்வோடு செய்த வாக்குறுதியை முழுமையாக்கி விட்டார்.

அதுமட்டுமல்ல, வான்மறை குர்ஆனிலும் இடம் பெற்றுவிட்டார். அல்லாஹு அக்பர்.

''அல்லாஹ்விடம் தாங்கள் செய்துகொண்ட வாக்குறுதியை உண்மையாக்கி விட்டவர்கள் முஃமின்களில் இருக்கிறார்கள். ஒருசிலர் தங்களுடைய நேர்ச்சையை முழுமையாக்கி விட்டார்கள்: இன்னும் சிலரோ, அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33;:23)

2 comments:

  1. மிகச்சிறப்பான ஹதீஸ். இவ்வாறான நல்ல விடயங்களை பேசும்போது அல்லது எழுதும்போது இஷ்டத்திற்கு வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்வது நல்லது.உதாரணத்திற்கு "கச்சைகட்டிக்கொண்டு" என்பது போன்ற வார்த்தைகள். கச்சை கட்டுவது இஸ்லாமிய நடைமுறையுமல்ல.அதை ஸஹாபாக்கள் ஒருபோதும் செய்ததுமில்லை.

    ReplyDelete
  2. (நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
    (அல்குர்ஆன் : 2:94)

    ReplyDelete

Powered by Blogger.