மாளிகாவத்தை மையவாடி காணி, சிங்களவரால் ஆக்கிரமிப்பு - தொடருகிறது அநீதி
-விடிவெள்ளி ARA.Fareel-
மாளிகாவத்தை மையவாடி காணி ஆக்கிரமிப்பு மற்றும் அக்காணியில் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நிர்மாணித்து வரும் கட்டடம் தொடர்பான விவகாரம் சூடு பிடித்துள்ளது.
இந்த சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக முன்னாள் மேயர் முஸம்மிலின் பதவிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு அவரது பதவிக்காலத்தின் பின்பு நியமிக்கப்பட்ட மாநகர ஆணையாளரினால் வாபஸ் பெறப்பட்டமை தொடர்பாக இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் முறையிட்டதையடுத்து அவர் மாநகர சபை ஆணையாளர் வீ.கே அநுரவையும் இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்க பிரதிநிதிகளையும் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.
குறிப்பிட்ட வழக்கு மேல் மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கவே வாபஸ் பெறப்பட்டதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்ததாக இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கத்தின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமையும் கடந்த புதன்கிழமை அமைச்சில் சந்தித்து மாளிகாவத்தை மையவாடிக் காணியில் சட்ட விரோதமாக பெரும்பாமை சமூகத்தவரான உபாலி ஜயசிங்கவினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் தொடர்பில் முறைப்பாடு செய்தனர்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது ‘அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் இதற்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வழக்கொன்றினைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் ரணிலுக்கு கடிதம்
மாளிகாவத்தை மையவாடிக்காணி கடந்த காலத்தில் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாகவும் கட்டடத்துக்குச் சொந்தக்காரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷவின் நண்பர் என்பதால் நீதி நிலைநாட்டப்படவில்லையெனவும் தற்போதைய நல்லாட்சி அரசில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.
சங்கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, மையவாடி காணியை அபகரித்து சட்ட விரோதமாக கட்டடமொன்றினை நிர்மாணித்து வரும் உபாலி ஜயசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து தடுக்க முயற்சித்த போதும் முடியாமற் போனது. அவர் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் நண்பராக இருந்ததே இதற்குக் காரணமாகும்.
வழங்கப்பட்டிருந்த கட்டட நிர்மாண அனுமதிப்பத்திரம் 2013 ஆம் ஆண்டு காலாவதியாகி விட்டது. அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாது தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்ந்தன.
இதற்கு எதிராக நாம் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் மாநகர சபை அதிகாரிகள், மாளிகாவத்தை பொலிஸ் சுற்றாடல் பிரிவு இதனைக்கண்டு கொள்ளவில்லை. இதற்குக் காரணம் நகர அபிவிருத்தி அதிகாரசபையே எனக்கருதுகிறோம்.
2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மாளிகாவத்தை மையவாடிக் காணி சட்டவிரோத கட்டடம் தொடர்பாக கொழும்பு மேயரிடம் பலகட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தினோம்.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபை சட்டவிரோத கட்டட நிர்மாணப்பணிகளை நிறுத்தும்படியும் கட்டடத்தை உடைக்க உத்தரவிடும் படியும் கோரி நகர அபிவிருத்தி அதிகார சபையின் 28 ஏ (3) ஆம் பிரிவின் கீழ் வழக்கொன்றினை தாக்கல் செய்தது.
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கட்டட நிர்மாணப்பணிகளுக்கு தடை விதித்து விசாரணையை ஜுன் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தாலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து கடந்த ஜுன் 15 ஆம் திகதி இரு தரப்பும் நீதிமன்றுக்கு தமது எழுத்து அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. தீர்ப்பு வழங்குவது ஜூலை 27 ஆம் திகதிக்கு ஒத்துவைக்கப்பட்டது.
என்றாலும் அன்றைய தினம் நீதிவான் சமுகமளிக்காமையால் பதில் நீதிவான் தீர்ப்பு வழங்குவதை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் எமது சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அன்றைய தினமே குறிப்பிட்ட வழங்கினை கொழும்பு மாநகர சபை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக நீதிவான் அறிவித்தார்.
இந்நிலையில் இது விவகாரத்தில் நீதி பெற்றுத்தரும்படி வேண்டுகிறோம் என இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் பிரதமரை வேண்டியுள்ளது.
மாளிகாவத்தை மையவாடிக் காணி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இப்பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம்கள் வழக்குகளுடன் ஜனநாயகமுறையான ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்க வேண்டும்
ReplyDelete