ஹஜ்ஜை தவறவிட்டவர்களின் மனதை உருக்கும் வலிகள்..!!!
இம்முறை (2016) ஹஜ் கடமை தவறிப்போன மக்களில் சிலரை 'விடிவெள்ளி' தொடர்புகொண்டது. அவர்கள் உங்களுடன் பேசுகிறார்கள்.
நம்பியிருந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்தது
பி.எம்.எம்.மன்சூர் – உடத்தலவின்னை
‘இலங்கைக்கு கடைசி நேரத்தில் மேலதிக ஹஜ் கோட்டா கிடைக்கும் எனக்கும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. புனித கஃபாவின் காட்சிகளே எனது மனக்கண் முன் நிழலாடுகிறது’ என்கிறார் பி.எம்.எம்.மன்சூர்.
மன்சூர் உடத்தலவின்னை மடிகேயைச் சேர்ந்தவர். அவரது வயது 67. மன்சூர் ஹஜ் பயணம் தவறிவிட்டதை எம்முடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். நான் திணைக்களத்தில் ஹஜ் பயணத்துக்காக பதிவு செய்து கொண்டிருக்கிறேன். கொழும்பிலுள்ள ஹஜ் முகவர் நிலையமொன்றினைத் தொடர்பு கொண்டேன். இம்முறை இதுவரை 2240 கோட்டாவே கிடைத்துள்ளதாகவும் அந்தக் கோட்டா பூர்த்தியாகிவிட்டதாகவும் முகவர் நிலைய உரிமையாளர் கூறினார்.
எப்படியாவது இந்த வருட ஹஜ் கடமை நிறைவேற்றியாக வேண்டும். அடுத்த வருடம் வரை காத்திருக்க முடியாது. அடுத்த வருடம் நான் இருப்பேனோ இல்லையோ எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நாட்டம் என்றேன். முகவர் நிலைய உரிமையாளர் எனக்கு ஆறுதல் வழங்கினார்.
கடைசி நேரத்தில் மேலதிக ஹஜ் கோட்டா பெற்றுக்கொள்ள அமைச்சர் ஹலீமும் முயற்சி செய்கிறார். உங்களுக்கு ஹஜ்ஜுக்கு போகலாம் என்று அவர் எனது பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டார். ஆனால் என்னிடமிருந்து முற்பணம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. பாஸ்போர்ட்டைக் கொடுத்துவிட்டு எதிர்பார்த்திருந்தேன். உறவினர்கள் எல்லோரிடமும் பயணமும் சொல்லிவிட்டேன். எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தேன்.
ஆனால் இலங்கைக்கு மேலதிக கோட்டா கிடைக்காது என்ற அமைச்சர் ஹலீமின் அதிரடி தகவலை பத்திரிகையில் படித்தபோது என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாமற்போனது.
ஒவ்வொரு நாளும் கனவில் கஃபாவைக் கண்டு கொண்டிருந்த எனக்கு இது பேரிடியாக இருந்தது. வியர்த்துக் கொட்டியது. ஊரில் எல்லோரும் என்னிடம் ஏன் ஹஜ்ஜுக்குப் போகவில்லை என்று கேட்டு என்னை வதைக்கிறார்கள். சம்பவத்தை மறக்க முயன்றாலும் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பதால் மறக்க முடியாமலிருக்கிறது.
இவ்வருடம் ஹஜ் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தும் பயணிக்க முடியாமற் போனவர்களுக்கு அடுத்த வருடம் முதலிடம் வழங்குவதாக அமைச்சர் ஹலீம் உறுதியளித்திருக்கிறார். அந்த எதிர்பார்ப்பில் இருக்கிறேன். அல்லாஹ் எனக்கு ஹஜ் பாக்கியத்தைத் தரவேண்டும் என்றார்.
‘ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் ஹஜ்கனவு இவ்வருடம் கானல் நீராகிவிட்டது. ஹஜ் குழு மேலதிக ஹஜ் கோட்டாவுக்கான முயற்சியை இறுதி நேரத்தில் முன்னெடுத்தமையே மேலதிக கோட்டா கிடைக்காமைக்கு காரணம்.
மேலதிகமாக ஹஜ் கோட்டா கிடைக்கவுள்ளது. இறுதி நேரத்தில் கிடைக்கும் என நம்பிக்கையூட்டப்பட்டதால் நாங்கள் ஏமாந்து போய்விட்டோம் என்கிறார். கண்டி மாவட்டம் மடவளை பஸாரைச் சேர்ந்த எச்.எம்.ஹில்மி (50 வயது)
ஹில்மியைத் தொடர்பு கொண்டு அவரது ஹஜ் பயணத்துக்கு என்னவாயிற்று என்று வினவிய போது அவரால் உடனடியாக பதிலளிக்க முடியாமற்போனது. அந்தளவுக்கு அவருக்குள் துயரம் நிறைந்திருந்தது. அவர் தனது ஆதங்கத்தை விடிவெள்ளியிடம் இவ்வாறு வெளியிட்டார்.
‘நானும் எனது மனைவியும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தோம். எனது மனைவி அரசாங்க பாடசாலையின் ஆசிரியை ஹஜ் பயணத்துக்காக வேண்டி மனைவியின் விடுமுறைக்கான அனுமதியும் பெற்றிருந்தார்.
முன்னைய வருடங்களை விட தற்போது இலங்கையிலிருந்து அதிகமானோர் ஹஜ் கடமையை நிறைவேற்ற தயாராகிறார்கள். ஹஜ் கோட்டா சவூதியினால் வரையறுக்கப்பட்டு வழங்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால் ஹஜ் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்படும் ஹஜ் குழு இலங்கைக்கு அதிகமான கோட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
பொறுப்பான அமைச்சர் சவூதிக்கு பல விஜயங்களை மேற்கொண்டு அயராது பாடுபட்டிருக்க வேண்டும்.
வெறுமனே ஹஜ் அமைச்சருக்கும் சவூதி மன்னருக்கும் கடிதம் எழுதி விட்டு எதிர்பார்த்திருப்பதால் எதுவும் ஈடேறிவிடப் போவதில்லை. இதுதான் இந்த வருட ஹஜ்ஜுக்கு நேர்ந்த அனர்த்தம் என்று கூட கூறலாம்.
ஹஜ் குழு ஹஜ் முகவர்களை நியமிப்பதிலும் கோட்டாவைப் பகிர்வதிலும் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கியதிலுமே காலத்தைக் கடத்தியதை நாம் கண்டோம்.
கண்டி மாவட்டத்தில் ஏராளமான ஆசிரிய ஆசிரியைகள் ஹஜ் எதிர்பார்ப்புடன் விடுமுறைகளையும் பெற்றுக்கொண்டு காத்திருந்து ஏமாந்து போய் விட்டார்கள். இனி வரும் காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படாமலிருப்பதற்கு ஹஜ்குழு உறுதியளிக்க வேண்டும்.
சவூதி அரசினால் வழங்கப்படும் பேஸா விசாக்கள் வசதியற்றவர்களுக்கே போய்ச் சேர வேண்டும். அவை அரசியல்வாதிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படக் கூடாது.
எனதும் மனைவியினதும் எம்மைப் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ஹஜ் கனவுகள் அடுத்த வருடம் நனவாகுமா? அரச ஹஜ் குழுவும் அமைச்சும் என்ன பதில் தரப்போகிறது பொறுத்திருக்கிறோம்.
இறுதி நேரம் கை நழுவி விட்டது எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்
எம்.எஸ்.எம்.நஸார் – கம்பளை
‘நானும் மனைவியும் எனது தாயாரும் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம் என்றாலும் கடைசி நேரத்தில் கைகூடாமற் போயிவிட்டது.
எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம். ஹயாத்துடன் இருந்தால் அடுத்தவருடம் எங்கள் நாட்டம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் மனதைத் தேற்றிக் கொண்டேன்’ என்கிறார் கம்பளையைச் சேர்ந்த 50 வயதான கடற்படை கப்டன் எம்.எஸ்.எம்.நஸார்.
தனதும் மனைவியினதும் தாயாரினதும் ஹஜ்கடமை தவறிப்போனமை தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ‘எங்களது பாஸ்போர்ட்களை ஹஜ் முகவர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தோம்.
இவ்வருடம் மேலதிக கோட்டாகிடைக்க விருப்பதாகவும் அந்தக் கோட்டாவில் பயண ஏற்பாடுகளைச் செய்வதாகவும் முகவர் என்னிடம் கூறினார். எங்களிடம் முற்பணம் எதுவும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை.
நாங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூறியிருந்தோம். ஆனால் இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.
மேலதிக ஹஜ் கோட்டா கிடைக்கவில்லை எனவும் அதனால் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு அனுப்பமுடியாதெனவும் ஏஜன்ட் கூறினார். அமைச்சர்கள் ஹலீம், பௌஸி ஆகியோர் மேலதிக கோட்டா பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலம் சவூதி மன்னரிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
என்றாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தன எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்து விட்டது என்றார். விடிவெள்ளி ARA.Fareel
Post a Comment