எர்துகானுக்காக தொடர்ந்து வீதிகளில் குழுமியிருக்கும் மக்கள் - பலி எண்ணிக்கை 265 ஆக உயர்வு
ஆயிரக்கணக்கான துருக்கியர் பாடல்களை பாடி கொண்டும், தேசியக் கொடியை அசைத்து கொண்டும் அதிபர் ரசீப் தையிப் எர்துவானுக்கு ஆதரவாக இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரத் தெருக்களில் குழுமியிருக்கின்றனர்.
இஸ்தான்புல்லில் உள்ள முக்கிய சதுக்கங்களில் நிறைந்து காணப்படும் அவர்கள், தங்களுடைய மண்ணையும் ஜனநாயகத்தையும் படையினர் எடுத்துவிட முடியாது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இரவு முழுவதும் முக்கிய சதுக்கங்களில் குழுமியிருக்கும்படி துருக்கி அரசு அதன் ஆதரவாளர்களிடம் வலியுறுத்தி இருக்கிறது.
சனிக்கிழமை மதியத்திற்கு பிறகு பல சர்வதேச விமான நிறுவனங்கள் இடைநிறுத்தியிருந்த தங்களின் விமானச் சேவையை இஸ்தான்புல் நகருக்கு தொடங்கின.
துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.
கொல்லப்பட்டோரில் 104 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள்.
ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு துவங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் துருக்கியின் நான்கு முக்கிய அரசியல் பிரிவுகளும் திட்டமிடப்பட்ட இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
துருக்கியின் நாடாளுமன்ற கட்டடமும் டாங்கிளாலும், விமானங்களாலும் வெள்ளிக்கிழமை இரவில் தாக்குதலுக்குள்ளானது.
Post a Comment