அனர்த்த முகாமைத்துவ அமைச்சருடன், முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு
-விடிவெள்ளி ARA.Fareel
முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைச்சர் யாப்பா
வெல்லம்பிட்டிய, மல்வானை உட்பட கொழும்புப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு முப்படைகளை அரசாங்கம் பயன்படுத்தவுள்ளது.
வீடுகளைச் சுத்தம் செய்து அவர்களை அங்கு குடியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு துரிதமாக மேற்கொள்ளவுள்ளது. இத்தகவலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தன்னைச் சந்தித்த முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீனின் தலைமையில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை, தேசிய சூரா கவுன்ஸில், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் வை.எம்.எம்.ஏ. உட்பட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவை அவரது அமைச்சில் சந்தித்து வெள்ள நிவாரண உதவிகள் தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
இந்தச் சந்திப்பின் போதே அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டார்.
அரசாங்கம் தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்கி வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நிகழாதிருப்பதற்கு மாற்றுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.
தற்போது மக்களுக்கு பாதணிகள், தும்புத் தடிகள், பெண்களுக்கான ஆடைகள், உறங்குவதற்கான மெத்தைகளே உடனடியாகத் தேவைப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் ஆகக் கூடியளவு மழை பெய்ததனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் சட்டவிரோத குடியேற்றங்களும் இதற்குக் காரணமாகும் எனவும் அவர் கூறினார்.
அமைச்சர்களைச் சந்தித்த முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொழும்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் முகமாக வெள்ள நிவாரண இணைப்பு பணியகமொன்றினை அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் அமைத்து இயக்கி வருவதாகத் தெரிவித்தனர்.
இந்தப் பணியகம் இன, மத, மொழி வேறுபாடின்றி நிவாரண உதவிகளை வழங்குவதற்காக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கொழும்பு நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டதனா லேயே அம் மக்கள் வெல்லம்பிட்டிய உட்பட பல தாழ்நிலப் பகுதிகளில் குடியேற வேண்டியேற்பட்டதாகவும் இதனால் அவர்கள் இன்று துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சருக்கு விளக்கினார்கள். இன்று பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களது வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கான உதவிகளை இன வேறுபாடின்றி நிவாரண இணைப்புப் பணியகம் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தனர்.
நகர்ப்புறப் பகுதியில் இவ்வாறான பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட முதல் சம்பவம் இதுவெனத் தெரிவித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகளினால் சுற்று நிருபங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
இதேவேளை, கொழும்பு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்கள் தமது விபரங்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் இயங்கிவரும் நிவாரண இணைப்பு பணியகத்துக்கு வழங்குமாறும் இன்றே பள்ளிவாசல்கள் மூலம் தெரியப்படுத்துமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ. முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment