அடம்பிடிப்போர் முட்டாள்கள் - ஜனாதிபதிக்கு முதுகெலும்பல்ல, மூளை இருக்கின்றது - ராஜித
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி, சமஷ்டி முறைமையிலான தீர்வுகள்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்போர் முட்டாள்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தமிழரென்பதால் தான் படைமுகாமுக்குச் சென்ற விடயம் பூதாகரமாக்கப்பட்டது. இவ்விடயத்தில் “முதுகெலும்பை” விட “மூளையை” பயன்படுத்தியே தீர்வுகாணப்பட வேண்டும் என்பதை உதய கம்மன்பில புரிந்துகொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழ் தான் தீர்வு. இல்லை. சமஷ்டி முறையில் தான் தீர்வு என அடம்பிடிப்போர் முட்டாள்கள். வடக்கு அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாற்ற சமஷ்டி முறையில் தீர்வு என சொல்கிறார்கள். இது அவர்களது அரசியல் இருப்புக்கான துரும்பாகும்.
அதேபோன்று தெற்கில் சிங்கள மக்களை ஏமாற்றும் அரசியல் இருப்புக்காக ஒற்றையாட்சிக்குள் தீர்வு என பிடிவாதம் பிடிக்கப்படுகிறது. எனவே தான் இதனை முட்டாள் தனமென அர்த்தப்படுத்தினேன்.
உலகில் பல்வேறு நாடுகளில் சமஷ்டி, ஒற்றையாட்சி, சுயநிர்ணய உரிமை என பல்வேறு ஆட்சிமுறைமைகள் மற்றும் கலப்பு ஆட்சிமுறைகளால் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. எமது அண்டை நாடான இந்தியாவின் அரசியலமைப்பில் சில மாநிலங்களுக்கு விசேட முறைமையில் அதிகாரங்கள வழங்கப்பட்டுள்ளன.
எனவே நாம் ஒவ்வொரு முறைமைகளை பிடித்துக்கொண்டு அடம்பிடிக்கக்கூடாது.1926ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டிச் சிங்களவர்களுக்கு சமஷ்டி முறைமையிலான ஆட்சியதிகாரம் தேவையென எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க வலியுறுத்தினார்.
அப்போது வடக்கு தமிழ் மக்கள் சமஷ்டி கேட்கவில்லை. முதன் முதல் சமஷ்டியை சிங்களவர்கள் தான் கேட்டார்கள். சகலரும் சமஷ்டியை ஆதரித்தனர். இன்று உலகம் மாறிவிட்டது. ஆட்சிமுறைகளும் மாறிவிட்டன. கலப்பு ஆட்சி முறைமைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
படை முகாம்
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தமிழர் என்பதால் தான் அவர் படைமுகாமுக்குச் சென்ற விடயம் பெரிதுபடுத்தப்பட்டது. ஜனாதிபதிக்கு முதுகெலும்பிருந்தால் சம்பந்தனை கைதுசெய்ய வேண்டும் என்றும் வடமாகாண சபையை கலைக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில கூறுகின்றார்.
முதுகெலும்பல்ல ஜனாதிபதிக்கு மூளை இருக்கின்றது. எனவேதான் சிந்தித்து தீர்மானங்களை எடுக்கின்றார். கடந்த காலங்களில் முதுகெலும்பின் பலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மூளை பயன்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்ட விபரீதங்களை நாம் பார்த்துள்ளோம். இதனை கம்மன்பில புரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் முகாமுக்குச் சென்றது தொடர்பில் கட்டளையதிகாரி எவரும் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யவில்லை. இவ்வாறான விஜயங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவே பொலிஸ் உயரதிகாரியுடன் இராணுவ கட்டளைத் தளபதி உரையாடியுள்ளார்.
படை முகாமுக்கு பிரபாகரன் போக வில்லையே? எதிர்க்கட்சித் தலைவர்தானே சென்றார். அத்தோடு எதிர்க்கட்சித் தலைவருக்கு வடக்கில் தமிழ் மக்களின் அழுத்தங்கள் உள்ளன.
அதனை சமாளிக்க வேண்டும். அத்தோடு அவர் மிதவாத அரசியல் கொள்கையை முன்னெடுக்க விரும்புகிறார். அதனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இப்பிரச்சினை முடிந்துவிட்டது என்றார்.
Very effective injection to joined opposition
ReplyDelete