Header Ads



பொதுபல சேனாவை சிங்களவர்கள் சீரியசாகப் பார்க்காமல், ஞானசாரரை வேடிக்கை பார்க்கின்றனர்

-நிலாந்தன்-

தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்துகொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள்  ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இருதேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ஒரு நாடு இரு தேசம் என்றகருத்துத் தொடர்பாக பேச வைப்பதாக அந்த நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது. நாடகம் முடிந்தபின் வளவாளர்கள் அந்நாடகம் தொடர்பாக  அபிப்பிராயங்களைத் தெரிவித்ததோடு அதைப்பற்றி கலந்துரையாடவும்பட்டது.  இதன் போது ஒரு வளவாளர் அந்நாடகத்தில் வரும்  பாத்திரங்களில் பொது பலசேனாவைத் தவிர ஏனைய எல்லா அரசியல் தலைவர்களும் வேடிக்கை மனிதர்களாகச் சித்திரிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.  ஆனால்  பொதுபலசேன மட்டும் சீரியசான விட்டுக்கொடுப்பற்ற மூர்க்கமான ஒரு தரப்பாக சித்திரிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இப்போதுள்ள கட்சித் தலைவர்களை ஹரிக்கேச்சர்களாக- கேலிச் சித்திரங்களாக உருவகித்த நெறியாளர் ஏன் பொதுபல சேனவை அவ்வாறு  கேலிச்சித்திரமாக உருவாக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆதற்கு நாடகக் குழுவினர் பதிலளித்த போது தாங்கள் வேண்டும் மென்றே அவ்வாறு பாத்திரங்களை உருவாக்கியதாக  கூறினார்கள். பொதுபல சேனா போன்ற  சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகள்  தமது கொள்கைகளில் விட்டுக் கொடுப்பின்றி  உறுதியாகக் காணப்படும் பொழுது ஏனைய அரசியல் கட்சிகள் தமது செயற்பாடுகளைப் பொறுத்தவரை கோமாளிகளாகவே மாறிவிட்டதாகவும் அவர்களுடைய செயற்பாடுகளில் பெருமளவிற்கு கோமாளித்தனமும் அபத்தமும்  காணப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இந்த உரையாடலின் முடிவில்  சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரிவித்தார். பொதுபல சேனாவை முஸ்லிம்களும் தமிழர்களும் அதிகம் சீரியசாகப் பார்ப்பது போல சிங்கள மக்கள் பார்க்கவில்லை என்று அவர் சொன்னார். சிங்கள மக்கள் ஞானசார தேரரை  ஒரு வேடிக்கை மனிதராகவே பார்ப்பதால்தான் தேர்தலில் அவரையும் அவரோடு சேர்ந்து நின்ற பிக்குகளையும் தோற்கடித்திருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னர்.

நடந்து முடிந்த தேர்தலில் பொதுபலசேனாவிற்கு கிடைத்த தோல்வியை சிங்கள பௌத்த கடும் போக்குவாதத்திற்குக் கிடைத்த தோல்வியாக மேற்கு நாடுகள் பார்க்கின்றன. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி விமர்சகர்களும் அவ்வாறுதான் கூறுகிறார்கள்.  யுத்த வெற்றி நாயகரான சரத்பொன்சேகாவையும் இம்முறை சிங்கள வாக்காளர்கள் தோற்கடித்துவிட்டார்கள். இலங்கைத் தீவின் முதலாவது பீல்ட் மார்சல் அவரது சொந்த மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டுவிட்டார்.

  இரண்டாம் உலக மஹா யுத்தத்தின் போது வின்சன்ட் சேர்ச்சிலை ஒரு தலைவராக ஏற்றுக் கொண்ட பிரித்தானியர்கள் யுத்தம் முடிந்ததும் அவரை நிராகரித்ததைப் போலவா இது?. இப்படியாக  தெற்கில் பொதுபல சேனா சரத்பொன்சேகா போன்றவர்கள் பெற்ற தோல்விகளை வைத்தும் வடக்கு கிழக்கில் மக்கள் முன்னணி பெற்ற தோல்வியை வைத்தும்  இலங்கைத் தீவில் தீவிர போக்குடைய சக்திகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக  மேற்கு நாடுகள் வியாக்கியானம் செய்கின்றன.

அண்மையில் இச்சிறிய தீவுக்கு வந்த போன நிஸா பிஸ்வால் அவ்வாறுதான் கருத்துத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள மிதப்போக்குடைய  விமர்சகரான  ஜெயதேவ உயாங்கொடவும்  அவ்வாறுதான் எழுதியுள்ளார்.   அதாவது நடந்து முடிந்த தேர்தலில் முழு இலங்கைத் தீவும் தீவீர நிலைப்பாடுள்ள கட்சிகளை நிராகரித்து விட்டதாகவும் மிதநிலைப்பாடுள்ள கட்சிகளையே தெரிந்தெடுத்திருப்பதாகவும் இதன் மூலம் இன நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் இப்பொழுது வியாக்கியானம் செய்யப்படுகின்றது. இது சரியா? மெய்யாகவே இச் சிறுதீவானது நல்லிணக்கத்தின் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதா?

இனவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதா?  ஆல்லது இனவாத்தின் ஆகப்பிந்திய  வடிவமாகக் காணப்பட்ட யுத்த வெற்றிவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதா? தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி ராஜபக்ஸ அணியை மிகப் பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கவில்லை என்பது தெரியவரும். சிங்கள கடும் போக்குவாதிகளின் இதயத்தில் இப்பொழுதும் ராஜபக்ஸக்களே வீற்றிருக்கிறார்கள்.

பொதுபலசேனவானது  யுத்த வெற்றிவாதத்தின் ஒரு குழந்தைதான். சிங்களபௌத்த கடும் போக்குவாதத்தை முழுக்க முழுக்க தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ராஜபக்ஸ சசோதரர்கள் முயற்சித்தார்கள். ஆனால் தனக்கென்று ஒரு தத்துவ அடித்தளத்தைக் கொண்டிருந்த, ஒப்பீட்டளவில் சுயாதீனமான ஜாதிக ஹெல உறுமயவை ராஜபக்ஸக்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அரசின் அனுசரணை பெற்ற பொதுபலசேனவை ஹெல உறுமயவுக்கு எதிராக ஊக்குவித்தார்கள். 

இந்நிலையில் வெற்றிவாதத்துக்கு வாக்களிக்க விரும்பிய சிங்கள வாக்காளர்கள் தாய்க்கு வாக்களித்தால் போதும் குழந்தைக்கு வாக்களிக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கக் கூடும்.  மேலும் சரத்பொன்சேகாவா? ராஜபக்ஸ சசோதரர்களா? என்று தெரிவு செய்ய வேண்டிவரும்பொழுது  மேற்கின் ஆதரவைப் பெற்ற  பொது எதிரணியோடு அடையாளம் காணப்பட்ட சரத்பொன்சேகாவைவிடவும் ராஜபக்ஸக்களைத் தெரிவு செய்வதையே அவர்கள் விரும்பியிருந்திருக்கக்  கூடும்.

அதே சமயம் தனக்கென்று ஒரு கோட்பாட்டு அடித்தளத்தைக் கொண்டிருக்கும் ஜாதிகஹெல உறுமயவானது பொதுபல சேனவைப் போல  முற்றாக மண் கவ்வவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.   ஜே.வி.பி.யும் எதிர்பார்த்த வெற்றியை  பெறத் தவறினும் முற்றாகத் தோற்கடிக்கப்படவில்லை. எனவே தென்னிலங்கை நிலவரங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்    விக்ரர் ஐவன்   கூறுவது போல அங்கு அரைவாசிக்கும் குறையாத வாக்காளர்கள்  இனவாதத்துக்கே வாக்களித்திருக்கிறார்கள்.  அதாவது இனவாதம் இப்பொழுதும் பலமாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில்   ரணிலும் மைத்திரியும் சந்திரிகாவும்  இனவாதத்துக்கு எதிராக நல்லிணக்கவாதத்தை முன்வைப்பார்களா? அல்லது மனித முகத்துடன் கூடிய  2015 ஆம் ஆண்டுக்குரிய ஓரு புதிய இனவாதத்தை அல்லது மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான  ஓரு புதிய இனவாதத்தைக் கண்டுபிடிப்பார்களா?

No comments

Powered by Blogger.