காத்தான்குடி நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, உருவச் சிலைகளை அகற்ற பிரேரணை
முஸ்லிம்களின் தொன்மைகளை வெளிக்காட்டும் நோக்கில் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள நூதனசாலை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இது இஸ்லாமிய வரையறைகளை மீறாத வகையில் அமையப்பெற வேண்டுமென்பதே முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்தாகும். இந்நிலையில் அந்நூதனசலையில் வைக்கப்பட்டுள்ள உருவச் சிலைகள் எல்லோரது கவனத்தையீர்த்துள்ளதோடு பாரிய விசனத்திற்கும் கவலைக்குமுரிய விடயமாகவும் மாறியிருக்கிறது.
மேற்படி விடயத்தின் பாரதூரத்தை அறிந்த நீங்களும் இதற்குரிய மார்க்கத் தீர்ப்பினை (பத்வாவினை) 30.03.2015ம் திகதிய கடிதம் மூலம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் கோரியிருந்தீர்கள். அதற்கமைவாக அவர்களும் 15.04.2015ம் திகதி அனுப்பிய கடித்ததில் “முஸ்லிம்கள் உருவச்சிலைகளை வணங்கவோ, அவற்றை ஞாபகச் சின்னங்களாக வைத்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும் இது விடயத்தில் இஸ்லாம் மிகக் கடுமையான எச்சரிக்கையினை செய்துள்ளதாகவும்” மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளதோடு மேற்படி மனிதர்களை ஒத்த உருவச் சிகலைகள் எக்காரணம் கொண்டும் வைக்கப்படக் கூடாது என்பதை தற்போது தங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இருப்பினும், இஸ்லாத்துக்கு விரோதமானதென காத்தான்குடி உலமா சபையினாலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த உருவச்சிலைகள் அகற்றப்படாமலேயே தற்போது இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உருவச் சிலைகள் இஸ்லாமிய மார்க்க போதனைகளுக்கு முரணாக அமைந்திருப்பதோடு, எதிர்காலத்திலும் இதனைப்பின்பற்றி அந்நிய மதத்தினரைப் போலவே முஸ்லிம்களும் சிலைகளை அமைக்கின்ற மோசமான நிலைமையினை இது ஏற்படுத்தும் என உலமாக்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் கவலை கொண்டிருக்கிறார்கள்.
எனவே, காத்தான்குடி நூதனசாலையிலுருந்து மேற்படி உருவச் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்வரும் நகரசபை அமர்வில் மேற்கொண்டு அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இப் பிரேரணையினை சமர்ப்பிக்கிறேன்.
மேற்படிப் பிரேரணையானது குறித்த விடயத்தின் முக்கியத்துவம் கருதி உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என NFGGயின் பிரதிநிதிகளான SH.பிர்தௌஸ் மற்றும் MAHM.மிஹ்ழார் ஆகியோரால் வலியுறுத்தப்பட்ட போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு நகரசபை தவிசாளர் SHM.அஸ்பர் உடன்படவில்லை. NFGG பிரதிநிதிகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் காரணமாக இப்பிரேரணை அடுத்தமாத சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் என சபையில் உறுதியளிக்கப்பட்டது.
Post a Comment