ஜனாதிபதி தேர்தல் போதைவஸ்து வியாபாரிகளுக்கு எதிரான தேர்தலாகும் -
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
கட்சியின் செயலாhளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
தமது 35 யோசனைகளையும் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமது யோசனைக்கு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமது யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் குழுவுடன் இணைந்துசெயற்பட தாம் தயாராக இருப்பதாக இன்று மாலை புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
வெள்ளை உடையணிந்த குற்றவாளிகளால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடனை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏன் என்று ரணவக்க கேள்வி எழுப்பினார்.
இன்று நாட்டில் பெற்றோல் ஒரு லீற்றரில் இருந்து 48 ரூபா களவாடப்படுகிறது.
போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நாட்டு தலைவர் பதவியில் இருந்தாலோ இல்லாவிட்டாலோ சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதை யாரும் அனுமதிக்கமுடியாது.
எனினும் 2009ம் ஆண்டு போருக்காக உதவிசெய்த நாடுகள் ஏன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளில் வாக்களித்தன.
இதற்கு சிலரின் சொந்த வியாபாரங்களுக்காக வெளிநாட்டுக்கொள்கையை மாற்றியது காரணமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை கூட்டத்தில் உரையாற்றிய அத்துரலியே ரத்தன தேரர், ஜனாதிபதி தேர்தல் போதைவஸ்து வியாபாரிகளுக்கு எதிரான தேர்தலாகும். எனவே அதில் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உறுமய பணத்துக்கு அடிபணியாமல் வெற்றி கிடைக்கும் வரை தமது பிரசாரங்களை மேற்கொள்ளும் என்று ரத்தன தேரர் தெரிவித்தார்.
இன்று மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச மக்கள் மனங்களில் இல்லாமை காரணமாகவே மின்கம்பத்தில் அவரின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளதாக ரத்தன தேரர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment