Header Ads



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், உத்தேசிக்கப்படும் தேசிய ஷுறா அமைப்பும்


(Ash-Sheikh T.Haidar Ali Al-Haleemi)

(All Ceylon Jammiyathul Ulama and Proposed National Shoorah Council)

இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை நெறியை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும். கட்டுக்கோப்பு என்பது மார்க்க அடிப்படையிலானது என்றும் தலைமைத்துவ அடிப்டையிலானது என்றும் இருவகையில் பிரிக்கலாம். ஷரீஆ அடிப்டையிலான கட்டுக்கோப்புக்குள்ளேயே இஸ்லாமிய அடிப்படையிலான தலைமைத்துவக் கட்டுக்கோப்பும் உள்வாங்கப்படுகிறது என்பது இஸ்லாமிய தலைமைத்துவத்தின் சிறப்பம்சமாகும். இதன் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்நாட்டு முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை சுமந்து செயற்படுகிறது என்பதே வெளிப்படையான உண்மையாகும். முஸ்லிம்களின் மார்க்கக் கிரியைகளுக்கு மாத்திரம் வழிகாட்டுதலோடு மாத்திரம் நின்று விடாமல், சமூகப் பிரச்சினைகள் மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு அவ்வப்போது ஏற்படும் அனர்தத்தங்களின் போது உதவுதல் போன்ற இன்னும் பல பணிகளை இது இந்நாட்டு மக்களுக்காக புரிந்து வருகிறது. 

இவைகளுக்கு மத்தியில் அண்மைகாலமாக ஒரு தேசிய ஷுறா அமைப்பின் தேவை பற்றியும் முஸ்லிம் புத்திஜீவிகளிடத்தில் பேசப்பட்டு வருவதையும், அதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தமது பரிசீலனைக்கு எடுத்தக் கொண்டதும் மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். துறை சார்ந்தோரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அ.இ.ஜ.உ எடுத்துக் கொள்வதில்லை என்ற தொடரான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இது ஒரு சிறந்த முடிவாகும் என பலராலும் பேசப்பட்டு வருகிறது. சென்ற 02.03.2013 அன்று ஹோட்டல் ரன்முத்துவில் நடைபெற்ற அ.இ.ஜ.உ மற்றும் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு நல்லதொரு முடிவை முன் வைக்கும் என நம்புகிறோம். இவ்விவகாரத்தில் முஸ்லிம்கள் மிகத் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

தலைவர் அல்லது தலைமைத்துவப் பண்புகள்:

தலைமைத்துவத்தை கொண்டிருக்கும் மனிதரிடத்தில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அடிப்படை நான்கு பண்புகள் கட்டாயமானதாகும்.

1. இஸ்லாம் பற்றிய தெளிவான விளக்கம்.
2. இக்லாஸ் எனும் மனத்தூய்மை.
3. முன்மாதிரி மிக்க வாழ்க்கை.
4. இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான அர்ப்பணிப்பு.

இந்தப் பண்புகளில் தெளிவான இஸ்லாமிய அறிவு முற்படுத்தப்பட்டுள்ளது. சிலர் சொல்வது போல மார்க்கமும் ஏணைய சமூக விவகாரங்களும் ஒன்றோடொன்று பிரிந்ததல்ல. அப்படியானால் சமூக விவகாரத்தில் இஸ்லாம் தேவையில்லை என்பதா அர்த்தம் ? எனவே மார்க்க விடயங்களில் மட்டுமின்றி சமூக விவகாரங்களிலும் இஸ்லாத்தைப் பிரதிபலிக்கும் தலைவர்களே உருவாக வேண்டும் என்பது இத்தலைப்பின் நோக்கமாகும். மனத்தூய்மை போலவே தமது வாழ்க்கை ஒரு முன்மாதிரியுள்ள முஸ்லிமாக (ஒரு முஸ்லிமின் அடையாளமுள்ளவராகவும்) தமது வாழ்வை சமூகத்திற்காகவே அர்ப்பணிப்பு செய்பவராகவும் இருத்தல் வேண்டும்.

சமூக அங்கீகாரமும், அடிபணியும் மக்களும் தேவை:

இந்தக் கூட்டு தலைமைத்துவம் எனும் போது பொது மக்களுக்கு மந்தமாகவே தென்படுகிறது. இதுவொரு அசாத்தியமற்ற செயற்பாடாகவும், பொருத்தமற்ற காரியமாகவும் மக்கள் பார்க்கின்றனர். ஏனெனில் பொது மக்கள் உலமாக்களுக்குக் கட்டுப்பட்டு பழக்கப்பட்ட சமூகம். ஒரு நாள் உலமாக்களை குறை கூறினாலும் மறுநாளே உலமாக்களுக்கே கட்டுப்படுவோம் என வாதிடுபவர்கள் எமது சமூகம். ஆகவே ஒரு தலைமைக்கு சமூக அங்கீகாரம் தேவை என்பது மிக முக்கியமானது. 

இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம். தமது ஒரு சொல்லை சொல்லுவதற்கு நபித் தோழர் அபூஹுரைரா (றழி) அவர்களை மக்கள் மத்தியில் அனுப்பும் போது தமது காலணியையும்; கொடுத்த அனுப்பினார். ஆதாரத்திற்காகவும் அவர் சொல்லும் சொல்லுக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்க வெண்டும் என்பதற்காகவேமே நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள். சிலர் 'நாம் கூடி ஒரு தலைவரை நிமித்து விட்டால் மக்கள் எல்லோரும் கட்டுப்படுவார்கள்' என நினைக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் இது வெறும் பலனற்ற முயற்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மட்டுமின்றி மக்கள் மத்தியிலே பல தேவையில்லாத பிரிவினைகளையும் உருவாக வாய்பில்லை என சொல்லவும் முடியாது.

தேசிய சூறா அமைப்பின் முறையும், நோக்கமும்:

அப்படியானால் உலமாக்கள் தானா எல்லாவற்றையும் செய்ய வேண்டும்? என்ற ஒரு கேள்வி இங்கு உருவாகிறது. அப்படியும் அல்ல. ஆனால் ஜம்இய்யாவை தலைமையிலிருந்து இல்லமலாக்கவும் முடியாது. அல்லது துறைசார்ந்தோரை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைத்துக் கொள்ளலாமே என்றால் அதுவும் முடியாத காரியமாகும். ஏனெனில் அ.இ.ஜ.உ சபையானது ஒரு கட்டமைப்பின் கீழும், ஒரு சட்ட யாப்பின் அடிப்படையிலும் ஒரு சாராரை அங்கத்தினராகக் கொண்டு இயங்குகின்ற ஒரு அமைப்பாகும். 

இதனடிப்படையில் அமைக்கப்படுகின்ற 'தேசிய அமைப்பு' அல்லது 'தேசிய ஷுறா கவுன்சில்' தனிமையான ஒரு சுதந்திர அமைப்பாக அமையப் பெற வேண்டும். அதற்கு ஒரு தனிமையான சட்ட யாப்பு இருக்கும். அது அவ்வப்போது தேவைப்படுகின்ற விவகாரங்களை ஆலோசனை செய்யும். சமூக விடயங்களோ அல்லது சமூகமயமாக்கப்பட்ட மார்க்க விவகாரங்களோ பற்றி இது ஆராயும்.

கவுன்சிலுக்கான அங்கத்துவம் கீழ்வருமாறு தெரிவு செய்யப்படும்:
1. தப்லீக் ஜமாத்
2. ஜமாஅத்தே இஸ்லாமி
3. தவ்ஹீத் ஜமாத்
4. தரீக்காக்களின் சம்மேளனம்
5. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் -
6. முஸ்லிம் சட்டத்தரணிகள் அமைப்பு
7. முஸ்லிம் ஊடக அமைப்புக்கள்
8. இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள்
9. மற்றும் துறைசார்ந்த நிபுனர்கள்

இப்படி பல துறைகளிலிருந்தும் நிறுவப்பட்ட ஒரு ஷுறா அமைப்பு உறுதிமிக்க ஒரு கவுன்சிலாக அமையும். அ.இ.ஜ.உ வின் முன்னணி ஆலிம்கள், இஸ்லாமிய இயக்கங்களின் ஆலிம்கள் மற்றும் தாஈகள் ஆகியோர் சேர்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு நிச்சயம் அ.இ.ஜ.உ வும் அங்கீகாரம் வழங்கும். சில வேளை இரண்டு அமைப்புக்களும் சேர்ந்து ஆலோசனை செய்யவும் சந்தர்ப்பங்கள் நிறையவே உருவாகும். இதன் போது உலமாக்கள், பொதுமக்கள் என்ற எந்த முரண்பாடுகளும் இல்லாமலாக்கப்பட்டு யாரையும் எவரும் குறை கூற முடியாத ஒரு நிலை ஏற்படலாம். அது போன்று இப்படியான சூழ்நிலையில் நிச்சயம் மக்கள் அங்கீகாரம் கிடைக்கும். முரண்பாடுகளும் உருவாக மாட்டாது. 

ஜம்இய்யத்துல் உலமாவுக்கும், கவுன்சிலுக்குமான உறவு:

இவ்விரண்டும் சமூகத்தின் இரு கண்களைப் போலவே இயங்கும். எப்பொழுதும் தமது முரண்பாடுகளையோ அல்லது கருத்து வேற்றுமைகளையோ சமூகத்திற்கு மத்தியில் கொண்டு வந்து விமர்சிக்காமல் தாமே கலந்துரையாடல்கள் மூலம் அவைகளை முடிவுக்கு கொண்டு வந்து சமூக நலனுக்கான காரியங்களை ஆற்ற வேண்டும். நேரடியாக மார்கத்துடன் தொடர்புபடாத எக்காரியத்தையும் இரு சாராரும் சேர்ந்தே ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

தற்போதையள ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலும், சில மும்மொழிவுகளும்:

உண்மையில் இது முஸ்லிம் சமூகத்திற்காக வேண்டி தொடராக ஜம்இய்யாவுடன் இணைந்தும், தனிமையாகவும் செயற்படுகின்ற ஒரு அமைப்பு என்றால் மிகையாகாது. தம்மோடு சுமார் நூற்றுக்குட்பட்ட அமைப்பக்கள் சேர்ந்து செயற்பட உடன்பட்டாலும் தொடர்ந்தும் பாடுபடுவதற்கு இதன் தலைவர், செயலாளர் எற்பட ஒரு சிலரே இருக்கின்றனர். ஆனாலும் தாம் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சென்ற நாட்களில் இவர்களின் முயற்சி எடுத்துக் கூறத்தக்கது. பொதுப் பணிகளில் இவர்கள் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள் என்ற வகையிலும், அ.இ.ஜ.உ வுடன் பல விடங்யங்களில் கூட்டாக இருந்து செயற்பட்டவர்கள் என்ற வகையிலும் புதிய அமைப்புக்களை உருவாக்காமல் மேற்படி புதிய உறுப்பினர்களை இதனோடு இணைத்து செயற்படலாம். அல்லது சில நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க புதிதாகவே உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இவர்களும் இதனுள் உள்வாங்கப்படுவது தமது செயற்திட்டங்களை துரிதபடுத்த பெரிதும் உதவும் என எண்ணுகிறேன். 

'எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிந்தவன்'

6 comments:

  1. எவர் விரும்பினாலும் .விரும்பாவிட்டாலும்,இஸ்லாமிய சமூக அமைப்பை பொறுத்தவரை,அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை சகல துறைகளிலும்,செல்வாக்குச் செலுத்துவதற்கு தகுதியுடையது, இஸ்லாமிய கல்வி முறைமை மாத்திரமே.இங்கு இஸ்லாமிய கல்வி முறைமை என்பதால் கருதப்படுவது,ஷரீஆ தொடர்பான கல்விதுறையகும்.எனெனில் குர் ஆன், ஹதீஸ் அது தொடர்பான அறிஞர்களின் கருத்துக்களும்தான் முஸ்லிம்களின் ஆதியும் அந்தமுமாகும்.இதை அடிப்படையாக வைத்தே முஸ்லிம்களின் அனைத்து அம்சங்களும் அணுகப்பட வேண்டியது அவ்சியமாகும்.ஆகவே இஸ்லாமிய ஷரீஆ பற்ரிய பூரணமான அறிவு உள்ளவர்கள்தான் இஸ்லாமிய அடிப்படையில் அறிவாளர்களாக தலைமைத்துவத்திற்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகின்றனர்.அறிஞர்களும் அறிவிலி களும் சமமாவார்களா(அஸ்ஸுமர் 08)என்று அல்லாஹ் எம்மைப்பார்த்து வினவுகின்றான்.இவ்வசனத்திற்கு அல்லாமா அபு பக்ர் ஜாபிர் அல்ஜசாயிரிய்யி அவர்கல் தங்களது ,,அய்சறுத்தப்சீர் என்ற நூலிலே :அறிவாளர்கள் என்று இங்கு குறிப்பிடப்படுவது எந்த அறிவைக்கற்றால் அல்லாஹ்வின் மீது அன்பும் நேசமும் ஏற்படுமோ அந்த அறிவாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.நிச்சயமாக இங்கு குறிப்பிடப்படுவது ,ஷரீஆ துறை சார்ந்த அறிவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.ஷரீஆ துறை சார்ந்த கட்டுக்கோப்புக்குள் இஸ்லாமிய தலைமைத்துவம் உள்வாங்கப்படுகின்றது என்றால் பொது மக்களைக்கொண்ட ஆலோசனை சபை உருவாகப்படுவதில் என்ன பிரயோசனம் ஏற்படப்போகிறது.உங்களில் ஈமான் கொண்டவர்களினதும் அறிவாளிகளினதும்படித்தரங்களை அல்லாஹ் உயற்துகிறான்.(அல்முஜாதலா 11 )இங்கு அறிவுள்ளவர்கள் எனக்குறிப்பிடுவது, மார்க்க அறிவாளர்களகும் என இமாம் குர்த்துபீ அவர்கள் குறீப்பிடுகின்றார்கள்.அ.இ ஜ.உ சபையின் உறுப்பினர்கள் மார்க்க அரிஜர்கள்.ஏன் அவர்களால் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க முடியாது?.எதற்காக துறை சார்ந்தவர்கள் அவசியப்படுத்தப்படுகின்றனர்.அபூ பக்ர் ரழி உமர் ரழி அவர்கள் எல்லாம் துறைசார்ந்த அரிஜர்களாக இருந்தார்களா.ஆக்க பூர்வமான முடிவுகளை எடுத்து பாரிய இஸ்லாமிய சாம்ரஜ்ஜியத்தை கட்டி ஆழவில்லயா. முஸ்லிம் உம்மாஹ் சார்ந்த தீற்கமான முடிவுகளை எடுப்பதற்கு த்தகுதியான அரிஜர்கல் உலமா சபையில் இல்லையா ? @@@ ஆலோசனை சபை வந்தால் கூடவே பிளவுகளும் வரும் ஏனெனில் சபையிலே அன்கத்தவர்களில் சிலர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக இருந்த்தால் அவர்களின் கருத்துக்கள் மார்க்க கருத்துக்களை விட செல்வாக்கு செலுத்தும்.ஆலோசனை சபையில் உள்ள ஒருவர் தன்யாள் வேரு அடிப்படையில் ஆளுமை உள்ளவராக இருந்து ஏனைய அங்கத்தவர்களிடம் அது இல்லாது விட்டால் ஒருவரின் கருத்து அங்கு செல்வாக்கு பெரும் நிலை ஏற்படும்.காலவோட்டத்தில் உலமாக்களின் கண்ணியம் கேள்விக்குறியாகி நிற்கும்.

    ReplyDelete
  2. அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையை கூறு போடுவதற்கு பொது பல சேன வை விட எமது பச்சோந்திகளே தருணம் பார்த்துக்கொண்டு காத்து இருக்கிறார்கள்.பொது பல சேன எதிர்பார்பவைகளில் இதுவே முதன்மையானது.தலைமைத்துவத்தின் தகுதியை பட்டியல் போட்டதின் உள்நோக்கம்தான் என்னவோ?இவர் கூறும் எதுவுமே இல்லாத ஒருவருடைய கையில் ACJU இருப்பதாக கூறுகிறாரா?அல்லது தனக்கு எந்த பதவியும் ACJU வில் தரப்படவில்லை என்கின்ற அங்கலாய்ப்பா?

    ReplyDelete
  3. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
    மேற்படி சபைகள் எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால்
    பிரதேச ரீதியாக குறிப்பிட்ட பள்ளிவாயல்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான
    தர்பியா பயிற்சி நெறி ,மற்றும் இஸ்லாமிய தலைமைத்துவ பயிற்சி என்பன
    தொடராக இடம்பெற்று வர வேண்டும் .

    ReplyDelete
  4. சகோதரர் அப்துல் கரீம் அவர்களுக்கு!
    உண்மையில் தாங்களின் மனதிலிருக்கும் ஆக்கபூர்வமான நிலைப்பாடும் கருத்துக்களும் உண்மையானது. ஆனாலும் துறைசார்ந்தோரையும், அனுபவமுள்ளோரையும் அ.இ.ஜ.உ சேர்த்துக் கொள்வதில்லை என்ற மிக நீண்டகால குற்றாச்சாட்டு இருந்து வருவதும் உண்மையே! எனவே இவர்களும் இங்கு வந்த அமர்ந்தால்தான் சமூகப் பிரச்சனை என்பது எது என்பதையும், அதற்காக ஜம்இய்யா எப்படி கையாள்கிறது என்பதையும் அவர்களும் அறிந்து கொள்வா. மட்டுமின்றி உண்மையில் இன்றும் ஜம்இய்யா துறைசார்ந்தோரை தம்வசம் வைத்துக் கொண்டே பொது விடயங்களில் செயற்படுகிறது என்பதும் வெளிப்படையானது. மேலும் இந்த ஷுறா அமைப்பின் மூலம் முழுத் தலைமைத்துவமும் பொது மக்களிடம் சென்று விடும் என்பது பிழையானது. ஒருபோதும் அப்படி ஒரு நிலை உருவாகவும் மாட்டாது. உருவாகவும் விடக் கூடாது. ஏனெனில் நீங்கள் குறிப்பிட்டது போன்று தலைமைத்துவம் என்பது ஷரீஆவை வைத்தே ஒரு முஸ்லிம் முடிவுசெய்ய வேண்டும். ஆனாலும் ஏணைய வளங்களையும் சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

    ReplyDelete
  5. முதலில் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்போர் உருவாகட்டும் அதல்லாமல் எதை அமைத்தாலும் சிக்களுக்கு மேல் சிக்கல் தான் உருவாகும்.

    ReplyDelete
  6. சமூகத்தை எங்கும் எதிலும் எக்காலமும் வழி நடத்த வேண்டியது உலமாக்களின் பொறுப்பு காரியங்களில் மஸூரா செய்யுங்கள் என்ற அல்லாஹ்வின் புத்திமதிக்கும் கட்டளைக்கும் ஏட்ப துறைசார்ந்தோர் ஆலோசனைகள் தம் துறைசார்ந்த விடயங்களில் கேட்கபடுகையில் அழகிய மஸூராக்களை முன்வைப்பது துறை சார்ந்தோறின் பொறுப்பு ஆக உலமாக்கள் தங்களின் பொற்றுப்பை முழுமையாக துறைசார்தோறை உள்வாங்கி பங்கிட்டு கொள்ள முடியாது எல்லாவற்றிலும் இருதி முடிவு எடுக்கும் அதிகாரம் உலமாக்களின் பொறுப்பே அரசியல் உட்பட சகல விடயங்களிலும் மக்களை உலமாக்கள் வழி நடத்தவேண்டும் வேண்டிய துறையில் வேண்டிய துறை சார் நிபுணர்களின் மஸூரக்களை பெற்று கொண்டவர்களாக மட்டும்?

    ஏனெனில் உலகில் மனிதர்களில் மிக நல்ல மனிதர் ஒருவரை காணலாம் எனில் அதனை முதலில் உலமாக்களில் இருந்தே கண்டு கொள்ள முடியும் மேலும் அல்லாஹ்வுக்கும் இந்த பூமியில் வாழ்வோறில் மிக உவப்பானவர்களாக உலமாக்களுக்கு முன்னால் வேறுயாறும் முதலிடம் பிடிக்க முடியாது

    ReplyDelete

Powered by Blogger.