ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சதி - அமைச்சரின் அச்சம்
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்றவர்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய கிளர்ச்சி ஒன்றுக்குத் திட்டமிட்டு வருவதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிடுகையில்,
"ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றோர், பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் தம்மை வீரர்களைப் போன்று காண்பித்து நாட்டின் இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை சீர்குலைக்க எத்தனிக்கிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் வன்முறைகளும், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களும் எமது நாட்டுக்கு புதியதல்ல. முன்னர் இடம்பெற்ற பல்கலைக்கழக போராட்டங்கள் வேறு. இப்போது நடைபெறும் போராட்டங்கள் வன்முறையாக மாறி ஒரு கிளர்ச்சியாக உருவெடுக்கும் ஆபத்து உள்ளது.
ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் மாணவர் மத்தியில் தங்கள் செல்வாக்கை அதிகரித்து பல்கலைக்கழக மாணவர்களை பலிக்கடாவாக்க எத்தனிக்கின்றனர். பொறுப்பற்ற சிறு பிரச்சினைகளை கூட பெரிதுபடுத்தி மாணவர்கள் இன்று போராட்டங்களை செய்து வருகிறார்கள்.
பெற்றோர், ஆசிரியர்கள், நாட்டு மக்கள் அனைவரும் தற்போதைய இந்த நிலை குறித்து அவதானமாக இருந்து இளைஞர் சமுதாயத்தை சிலர் அரசியல் நோக்கங்களுக்காக தவாறான வழியில் இட்டுச் செல்வதை தடுக்க வேண்டும். இளம் சந்ததியினருக்கு சரியான வழிகாட்டலை கொடுக்க வேண்டும். ஜே.வி.பி கிளர்ச்சிக்குழுவினரின் சதித்திட்டங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment