Header Ads



'அடுத்த 5 வருடத்தில் ஆட்சியை, கைப்பற்றியே தீருவேன்' - சஜித் சூளுரை

(செ.தேன்மொழி)

பொதுத் தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ள மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கின்றோம். அதற்காக ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் , நாட்டுக்கு ஒவ்வாத தீர்மானங்கள் மற்றும் அரசாங்கத்தின் அடாவடி தனங்களை வேடிக்கை பார்க்கப் போவதில்லை. எதிர்கட்சி என்ற அந்தஸ்து எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சி பீடத்தை கைப்பற்றியே தீருவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மிகக்குறுகிய காலத்தில் பாரியதொரு வரலாற்று வெற்றியை அடைந்துள்ளோம். இந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எதிர்கொண்ட சவால்கள் இன்னோரன்னவை. எனினும் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை இறுதிவரை காப்பாற்றுவோம். 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவ்விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : 

ஐக்கிய மக்கள் சக்தி ,  ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஆணையுடன் ஸ்தாபிக்கப்பட்டாலும், தேர்தலை நடாத்துவதற்கு சில தினங்களே இருந்தபோது ஐ.தே.க.வின் மாறுப்பட்ட தீர்மானத்தினால் புதிய கட்சி என்ற வகையில் பல போராட்டங்களின் மத்தியில் நாங்கள் இந்த மக்கள் ஆணையை வெற்றிக் கொண்டுள்ளோம். தற்போது எமக்கு கிடைத்துள்ள இந்த மக்கள் ஆணைக்கு நாங்கள் மதிப்பளிப்பதுடன் , வெறுமனே வார்த்தைகளால் மாத்திரம் எமது நன்றியை தெரிவிக்காமல் , எங்களது செயற்பாட்டின் மூலம் அதனை நாட்டுமக்களுக்கு உணரச் செய்வோம்.

புதிய கட்சி என்ற வகையில் நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை புதிதாக உருவாக்கியிருந்தாலும் அவர்கள் தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு ஒரு வருடகாலம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு சில மாதங்களிலேயே பொதுத் தேர்தலில் முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. 

இதேவேளை ஏனைய முன்னணி கட்சிகளுடன் ஒப்பிடுகையில் எமக்கு போதியளவான அடிப்படைவசிதிகளோ, சொகுசு காரியாலயங்களோ இருக்கவில்லை. இந்நிலையில் எம்மமைச்சுற்றிலும் பலர் எமக்கு எதிராக வதந்திகளை பரப்பியதுடன், எமது செயற்பாடுகளுக்கு இடையூறும் விளைவித்தனர். இவ்வாறான நிலையில் நாங்கள் கடந்து வந்தபாதை முற்கள் நிறைந்த பாதையாகும்.ஆனால் எமக்கு மக்கள் ஒரு ஆணையை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்கட்சி என்ற வகையில் எமது பொறுப்பை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் அருதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்திருந்தாலும், அவர்களை வீழ்த்த முடியாது என்ற நிலைமை ஏற்படவில்லை. 2010 ஆம் ஆண்டு இவ்வாறே மக்கள் அரசாங்கத்திற்கு அருதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்திருந்தனர். ஆனால் அவர்களால் நான்கு வருடங்களுக்கு மேலாக நிலைத்திருக்க முடியவில்லை. 

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திற்கும் அந்த நிலைமையே. எமக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் , நாட்டுக்கு ஒவ்வாத தீர்மானங்கள் மற்றும் அரசாங்கத்தின் அடாவடி தனங்களை வேடிக்கை பார்க்கப் போவதில்லை. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் , எதிர்கட்சி என்ற அந்தஸ்து எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சி பீடத்தை கைப்பற்றியே தீருவோம்

மாகாணசபை தேர்தல்

ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்த குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்டுள்ள மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளுராச்சி மன்ற தேர்தல் என்பற்றில் வெற்றிகரமாக முகங்கொடுக்கும். மக்கள் தங்களது மாற்று அரசியல் கட்சியாக எம்மை தெரிவுச் செய்துள்ளனர். அதற்கமைய நாங்கள் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்நிலையில் மாகாணசபை தேர்தலின் போது எதிர்க்கட்சியின் வல்லமையை அரசாங்கம் உணரும்.

 நாங்கள் சொகுசு காரியாலயங்களுக்குள் இருந்து எமது பயணத்தை ஆரம்பிக்கவில்லை. பூமியில் கால் பதித்தே எங்களது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்கமைய கிராம மற்றும் நகர்புற மக்களின் ஆதரவை வெற்றிக் கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் சிறந்த முறையில் போட்டியிட்டு வெற்றிக் கொள்வோம்.


தேசியப்பட்டியல்


தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. வெகு விரைவில் அதுதொடர்பில் அறியத்தருவோம். இதேவேளை முன்னைய காலங்களில் போன்று தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடம்பெற்றுக் கொடுப்பீர்களா என்று ஒருவர் என்னிடம் வினவியிருந்தார்.

அப்போது நான் தோல்வியுற்றவர்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தேன். அந்த கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.  கொள்கைக்கு மதிப்பளித்து செயற்படும் கட்சி என்ற வகையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எவருக்கும் தேசிய பட்டியலில் இடமலிக்கமாட்டோம்.

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம்

நாட்டு மக்களுக்கும் , நாட்டிற்கும் நன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்திட்டத்திற்கும் நாங்கள் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எந்த ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க மாட்டோம். அரசியலமைப்பு திருத்துவது என்பதும் , அதனை நீக்குவது என்பதிலும் பாரிய மாற்றம் இருக்கின்றது. 

19 ஆவது அரசியலமைப்பை பொருத்தமட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த திருத்தத்தை நீக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஆனால் நாட்டுக்கு நன்மைபயக்கும் வகையில் புதிய திருத்தங்கள் எதுவும் கொண்டுவரப்பட்டால் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம்.

பங்காளிக்கட்சிகள்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள பங்காளி கட்சிகளுக்கு , கட்சியிலிருந்து பிரிந்து செல்வதற்கு மக்கள் ஆணையை பெற்றுக் கொடுக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கே அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இந்நிலையில் எமது கட்சிக்கென்று தனிப்பட்ட கொள்கைத்திட்டம் இருக்கின்றது. 

பல இன மக்கள் வாழ்ந்துவரும் இந்த நாட்டில் , ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ முன்னிலைப்படுத்தும் மக்களின் தொகை குறைவாக இருக்கின்றமையினால், அவர்களை சிறுபான்மைய இனர் என்று கூறுவதை நான் விரும்பவில்லை. இது முறையற்ற செயற்பாடாகும். 

பௌத்த மதம் முதலிடம் பெற்றுள்ளதால் அதற்கான முதலிடத்தை வழங்குவதுடன் , ஏனைய இனம் , மதம் மற்றும் கலாசார பண்புகளையும் பாதுகாத்து செயற்படுவதையே நான்விரும்புகின்றேன். இதனால் எமது கொள்கையை விரும்பி எம்முடன் இணைந்துக் கொண்டுள்ள எவரும் திரும்பிச்செல்ல மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன். இதேவேளை எமது கொள்கைளைக்கு மதிப்பளிப்பவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கமுடியும்.


2 comments:

  1. ENNA, MEENDUM PENGALUKKU MAATHAVIDAI
    NAPKIN KODUKKAVAA????
    PAKATKANAVU KAANGINRA ORU AAL IVAR.

    ReplyDelete
  2. (நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.

    “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!
    (அல்குர்ஆன் : 18:23-24)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.