Header Ads



கட்டுநாயக்க விமான நிலைய சுங்க தீர்வையற்ற, வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இன்று (06) முதல் திறக்கப்பட்டுள்ளன. 

இதன்படி வர்த்தக நிலையங்கள் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த விமானப் பயணிகளுக்காக மாத்திரம் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் முன், விமான நிலையத்தை தொடர்பு கொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நபர்கள், தாம் தனிமைப்படுத்தப்பட்டமைக்காக நிலையங்கள் வழங்கிய சான்றிதழ்கள் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமைக்காக பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தவிர கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் விமான நிலையத்தின் பணத்தை பரிமாற்றம் செய்ய சந்தர்ப்பம் தற்போது இல்லை என்பதால், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்களை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இல்லை எனின், கடன் அட்டைகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.