Header Ads



இரட்டை பிள்ளைகளைக் கொண்ட 69 குடும்பங்களுக்கு நிதி அன்பளிப்பு

இரட்டை பிள்ளைகளைக் கொண்ட 69 குடும்பங்களுக்கு நிதி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இரட்டைக் குழந்தைகள், ஒரே தடவையில் பிறந்த மூன்று, நான்கு மற்றும் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட 69 குடும்பங்களுக்கு அப்பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக ரூபா 10 இலட்சம், 20 இலட்சம் மற்றும் 25 இலட்சம் வீதம் இதன்போது நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டது.

இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொண்ட போதிலும் அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு நிதி அன்பளிப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கேற்ப ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய நாடெங்கிலுமுள்ள இரட்டைப் பிள்ளைகளின் நலனுக்காக பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அவர்களினால் 2019ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்துடன் இணைந்ததாக விசேட நிதியமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அந்நிதியத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்வதற்காக “திரிதரு சம்பத்த” எனும் பெயரில் புதிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டு ஜனாதிபதி அவர்களினால் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

தேசிய லொத்தர் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் முதலாவது சீட்டு ஜனாதிபதி அவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் ஜனாதிபதி நிதியத்தினால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 12 மருத்துவமனைகளுக்கான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டன.

இந்த தேசிய வேலைத்திட்டங்களுடன் இணைந்ததாக ஜனாதிபதி அவர்களுக்கு அவரது பணிக்குழாமினரால் நன்றி தெரிவிக்கும் “சேவா பிரசாதனி” சேவை பாராட்டு விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்களின் நலனுக்கான விசேட வேலைத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நாட்டுக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி அவர்களால் கடந்த ஐந்து வருடகாலமாக நிறைவேற்றிய செயற்பணிகளை பாராட்டும் வகையில் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்னவினால் வழங்கப்பட்டது.

ஜயந்தி சிறிசேன அம்மையார், வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோரும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் ஆளணியினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.