Header Ads



“மட்டகளப்பு பல்கலைக்கழக கல்வி, நிர்வாக நடவடிக்கைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும்” - ப.ஆ.ச.

மட்டகளப்பு - புனானை இஸ்புல்லா சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மட்டகளப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அரசு பொறுப்பேற்று அனைத்து மதத்தவரும் கல்விகற்க கூடியதான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைகழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை காரியாலத்தியில் இன்று -29- திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் குறித்த கோரிக்கைகளை  முன்வைத்தனர்.  இதன்போது செயலாளர் சன்ன ஜயசுமன கூறுகையில் ,

மட்டகளப்பு - புனானை , இஸ்புல்லா சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மட்டகளப்பு பல்கலைகழகம் ஆரம்பத்தில் தொழிற் பயிற்சி நிலையமாவே உருவாக்கப்பட்டது. 

இந்நிலையம் காலத்திற்கு காலம் மாற்றி அமைக்கப்பட்டு தற்போது இலங்கை மட்க்களப்பு பல்கலைகழகம் என பெயர் மாற்றம் பெற்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 

இந்த பல்கலைகழக கல்வி பீடங்கள் முக்கியமாக இஸ்லாமிய மதத்தை அடிப்படையாக கொண்டு போதிக்கப்பட்டு வருவதுடன், சட்டம் தொடர்பான பாடத்திட்டங்கள் ஷறியா நீதிமுறைகளை போதிப்பவையாகவே காணப்படுகின்றது. மற்றும் இதன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும் சவூதி  அரேபியா , மலேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் காணப்படும் அறபு பல்கலைகழகங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதுடன் இதில் இலங்கையைச் சேர்ந்த எந்த பேராசிரியர்களும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மதத்தை அடிப்படையாகக் கொண்ட பல்கலைகழகங்கள் மற்றும் தனியார் பல்கலைகழகங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் இதனை முன்னுதாரணமாக கொண்டு மேலும் நாட்டிற்குள் இதுபோன்ற பல்கலைகழகங்கள் உருவாக கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். 

அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளினால் குறிப்பிட்ட மதவாதிகள் உருவாக கூடிய வாய்ப்புகள் ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய மதமோதல்கள் ஏற்படவும் இது வழிவகுக்கும்.

அதனை கருத்திற் கொண்டு உடனடியாக அரசு இந்த பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்று சகல மதத்தவரும் இணைந்து கல்விகற்க கூடிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

(செ.தேன்மொழி)

No comments

Powered by Blogger.