சமாளிக்கும் பதில்களை வழங்கிய திலும், இருவர் பற்றி துருவித்துருவி விசாரணை
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அண்மையில் பரவிய இனவாத வன்முறைகள் தொடர்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் கையடக்கத்தொலைபேசி மேலதிக ஆய்வுகளுக்காக ரி.ஐ.டி. கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அது சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்றினால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் இருந்து தரவுகளை வெளிப்படுத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவே திலும் அமுனுகமவின் தொலைபேசியில் இருந்து தரவுகளை வெளிப்படுத்திக்கொள்ள ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் திலும் அமுனுகமவின் தொலைபேசியை ரி.ஐ.டி. கைப்பற்றியமை தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவை தொடர்பு கொண்டபோது, விஷேடமாக திலும் அமுனுகமவின் தொலைபேசியில் இருந்து கடந்த மார்ச் 4, 5 ஆம் திகதிகளில் பரிமாறப்பட்ட தகவல்களை வெளிப்படுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டே தொலைபேசி கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு- கோட்டையில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் கடந்த 15 ஆம் திகதி முற்பகல் 10.50 மணிக்கு ஆஜரான திலும் அமுனுகமவிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இரவு 11.30 மணிவரை 12 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தெல்தெனிய, -திகன, கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய, கலகெதர, மெனிக்ஹின்ன, பல்லேகலை பகுதிகளில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இனவாத வன்முறைகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வன்முறை தொடர்பில் கைதான பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் கைது செய்வதற்காக தேடப்படும் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் துருவித்துருவி ரி.ஐ.டி.யினர் விசாரணைகளை முன்னெடுத்ததாக அறியமுடிகின்றது.
இதன்போது சமாளிக்கும் விதமான பதில்களை திலும் அமுனுகம வழங்கியதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் அவரது கையடக்கத்தொலைபேசியை மேலதிக ஆய்வுக்காக பயங்கரவாத பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் அவசியம் ஏற்படின் மீள் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி விடுவித்துள்ளனர்.
ஏற்கனவே திலும் அமுனுகமவை கடந்த 10 ஆம் திகதி ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்போது அவர் ஆஜராகவில்லை. இந்நிலையிலேயே நேற்று முன்தினம் அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் மேற்பார்வையில் அதன் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் குழு இந்த இனவாத வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இரு பிரதேச சபை உறுப்பினர்கள், மஹாசோன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட முக்கிய சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்வதற்கு தேடப்பட்டு வருகின்றனர். இந் நிலையிலேயே இதுவரையிலான விசாரணைகளில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் மற்றும் தகவல்களுக்கு அமைய திலும் அமுனுகமவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
-Vidivelli MFM.Fazeer
Post a Comment