சதகத்துல்லா மௌலவி, ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை
கண்டிப் பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்செயல்களின்போது பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கையில், இனவாதிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த ஏ.சி.எம்.சதகத்துல்லா மௌலவி 50 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் கண்டி அரசாங்க வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மார்ச் 7 ஆம் திகதி அக்குறணையிலிருந்து கண்டி நோக்கி இ.போ.ச. பஸ்ஸில் பயணம்செய்து கொண்டிருக்கையில் பஸ்ஸை நிறுத்தி இனவாதிகள் சதகத்துல்லா மௌலவியைத் தாக்கினார்கள். தாக்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை அவர் வைத்தியசாலையில் பேசமுடியாது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாததினால் உறவினர்கள் அவரது மேலதிக சிகிச்சைக்கு உதவி புரியுமாறு இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்செயல்களின் போது காயங்களுக்குள்ளானவர்களுக்கு புனர்வாழ்வு அமைச்சு நஷ்டஈடு வழங்கியுள்ளபோதிலும் சதகத்துல்லா மௌலவிக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை என அவரது சகோதரர் ஏ.சி.அமானுல்லா விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
'கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி கண்டி அரசினர் வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சதகத்துல்லா மௌலவி சில தினங்களின் பின்பு 51 ஆம் விடுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு மீண்டும் அவர் கடும் சுகவீனமுற்றதையடுத்து அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இன்றுவரை சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் அவரது மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அவரது சிகிச்சைக்காக வைத்திய நிபுணர் சுனில் பெரேராவை நாடவேண்டியுள்ளது. இதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். வைத்திய நிபுணரின் விஷேட சிகிச்சைகளை நடத்தினாலேயே அவரைக் காப்பாற்ற முடியுமென நினைக்கிறோம்' என்றும் அவர் கூறினார்.
-Vidivelli
Post a Comment