அபாயா + ஹிஜாப் விவகாரம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதுதான்...
அபாயா விவகாரத்துக்கு நிரந்தர தீர்வே அவசியம்
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் 'அபாயா' எனும் இஸ்லாமிய கலாசார ஆடையை அணிந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தி பாடசாலை சமூகத்தினால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பலத்த சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.
இந்த விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில் நேற்று திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இரு தரப்பினரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதற்கமைய சம்பந்தப்பட்ட ஐந்து முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் தற்காலிக இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களின் பின்னர் நிர்ந்தர இடமாற்றம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கமைவாக எந்தவொரு இலங்கைப் பிரஜையும் தமது முக அடையாளங்களை மறைக்காத வகையிலான கலாசார ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2014 ஆம் ஆண்டு ராஜகிரிய ஜனாதிபதி பாலிகா வித்தியாலய அதிபர், முஸ்லிம் மாணவி ஒருவரின் தாயார் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்குள் நுழைவதற்கு தடை விதித்த விவகாரம் தொடர்பில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான கே.ஸ்ரீபவன், பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் கொண்ட குழுவே இத் தீர்ப்பை வழங்கியது. அதில் முஸ்லிம் மாணவர்களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் இத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
இதேபோன்று மேல், ஊவா, மற்றும் தென் மாகாண சிங்களப் பாடசாலைகளில் இவ்வாறான ஆடை குறித்த சர்ச்சைகள் ஏலவே தோன்றியுள்ளன. இவற்றில் சில வழக்குகள் நீதிமன்றத்திற்குச் சென்று தீர்வு காணப்பட்டுள்ளன. இவை எவற்றிலுமே முஸ்லிம் மாணவிகளோ அல்லது ஆசிரியர்களோ கலாசார ஆடைகளை அணிய முடியாது எனத் தீர்ப்பளிக்கப்படவில்லை.
எனவேதான் இந்த விவகாரத்தில் பிடிவாதங்களுக்கப்பால் சட்ட ரீதியாகவுள்ள தீர்ப்புகளும் கல்வியமைச்சின் சுற்று நிருபங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். குறித்த பாடசாலையில் இந்துப் பாரம்பரியங்கள் கடைப்பிடிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். எனினும் மற்றொரு சமூகத்தின் பாரம்பரியத்தை அது மறுதலிக்க முனைவதே இங்கு பிரச்சினைக்குரியதாகும்.
இவ்வாறான பிரச்சினைகள் இதன் பிறகும் ஏற்படக் கூடாதெனில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மத்திய கல்வியமைச்சின் கரிசனையுடன் சட்ட அந்தஸ்துள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டே புதிய ஆசிரியர் நியமனங்களும் ஆசிரிய இடமாற்றங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாதவிடத்து இவ்வாறான முரண்பாடுகள் தொடர்ச்சியாக மேலெழவே செய்யும். இவை ஆசிரியர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும். இது நிச்சயமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பின்னடைவுகளைக் கொண்டுவரும்.
எனவேதான் எதிர்காலத்தில் இவ்வாறான இன, மத முரண்பாடுகள் அரச கல்வி நிறுவனங்களில் இருந்து தோற்றம் பெறாமலிருப்பதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். அதற்கு இவ்வாறான தற்காலிக இடமாற்றங்கள் ஒருபோதும் உதவப் போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
(விடிவெள்ளி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)
Post a Comment