19 ஆம் திகதி, "எதிரணியில் அமருவோம்"
பிரதமருக்கு எதிராக வாக்களித்துவிட்டு அமைச்சுப்பதவிகளை வகிக்க எமக்கு உரிமை இல்லை. ஆகவே எமது மனச்சாட்சிக்கு அமைய தீர்மானம் எடுத்துள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சுப்பதவிகளை துறந்து எதிர்க்கட்சியில் 19 ஆம் திகதி அமரும் எமது தீர்மானத்தில் மாற்றம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணை இதுவரை காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக நாம் கூறிய காரணிகள் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கைக்கு அமைய சுட்டிக்காட்டப்பட்ட காரணிகளாகும். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் பிரதமர் பிரதான குற்றவாளி என தெரிந்தும் அந்தக் காரணிகளை நாம் சுட்டிக்காட்டிய பின்னரும் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஆதரிக்காது செயற்பட முடியாது.
ஆகவே நாம் ஜனாதிபதியின் அனுமதியுடன் நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஆதரிக்க தீர்மானம் எடுத்தோம். இதன் பின்னணியில் தான் எமக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மற்றும் தேசிய அரசாங்கத்தில் இருக்கக் கூடாது என்ற அழுத்தங்கள் எழ ஆரம்பித்துள்ளன. எனினும் இவற்றை முகங்கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்த பின்னர் எமக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்கவோ, அல்லது அமைச்சரவையில் அங்கம் வகிக்கவோ தார்மீகம் இல்லை. ஆகவே நாம் எமது அமைச்சுப்பதவிகளை துறந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுத்துள்ளோம். எமது நிலைப்பாட்டினை நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம். பின்னர் நேற்று கூடிய மத்திய குழுக் கூட்டத்தில் எமது நிலைப்பாட்டினை தெரிவித்தோம். எனினும் இறுதி தீர்மானம் ஒன்று நேற்றைய கூட்டத்தில் பெறப்படவில்லை. எவ்வாறு இருப்பினும் நாம் அமைச்சுப் பதவிகளை துறக்க தயாராக உள்ளோம். எமது 16 உறுப்பினர்களும் அமைச்சுப்பதவிகளை துறந்து எதிர்வரும் 19 ஆம் திகதி எதிர்க்கட்சியில் அமர தீர்மானம் எடுத்துள்ளோம்.
நேற்று கூடிய மத்திய குழுக் கூட்டத்திலும் நாம் இதே நிலைப்பாட்டில் இருந்தே கருத்துகளை முன்வைத்தோம். இன்றைய( நேற்று ) அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்க நாம் தீர்மானம் எடுத்தோம். அதற்கமைய எமது அமைச்சரவை அமைச்சர்கள் எவரும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் எமது நிலைப்பாடுகள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எனினும் ஜனாதிபதியை பாதுகாக்கும் கடமை எமக்கு உள்ளது. அதேபோல் இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் நாம் முயற்சிக்கவில்லை. எமது மனச்சாட்சிக்கு அமைய நாம் எதிர் அணியில் அமர்ந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Share
Post a Comment