சிறையில் பாதுகாப்பாக இருக்க, நடித்த கொலையாளி கைது
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டியாவத்த- சுமித்ராராம வீதி, பிலிங் தோட்டத்தில் கடந்த மார்ச் 8 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபராக கருதப்படும் தனுக எனப்படும் தினூஷ சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பாக இருக்க டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட், கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடன் சிறு தொகை போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறை க்கு செல்ல முற்பட்ட வேளையில் இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன் இருந்த மற்றொருவரும் இது தொடர்பில் கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட தினூஷ சந் தோஷ் மற்றும் பிர சாத் பதலே ஆகியோரை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று அனுமதி பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களுக்கு உதவ முற்பட்ட டாம் வீதி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் பிரசாத் பதலே 560 மில்லிகிராம் ஹெரோயினுடனும், தினூஷ சந்தோஷ் 600 மில்லி கிராம் ஹெரோயினுடனும் குறித்த சார்ஜன்ட், கான்ஸ்டபிளிடம் சென்று வேண்டுமென்றே திட்டப்படி சிக்கிக்கொண்டுள்ளதுடன், அது தொடர்பில் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றை கோரி உதவி செய்ய அவ்விருவரும் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே கைதின் பின்னர் சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பேற்ற நிலையில், உதவ முற்பட்ட இரு பொலிஸாரையும் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடை நிறுத்தம் செய்துள்ளார்.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 29 வயதுடைய மிலான் மதுசங்க என்பவர் உயிரிழந்ததுடன் 34 மற்றும் 61 வயதுகளை உடைய சமந்த பிரதீப், ஜீ.பி.குமாரதாஸ ஆகியோர் படுகாயமடைந்தனர்.
Post a Comment