Header Ads



அமெரிக்க - சிறிலங்கா கடற்படை பயிற்சி இன்று ஆரம்பமாகிறது


அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கரட்-2017 எனப்படும் ‘கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு-2017′ (‘Cooperation Afloat Readiness and Training’ aka ‘CARAT 2017’) என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியை சிறிலங்கா கடற்படையும், அமெரிக்காவின் பசுபிக் கப்பற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகள் ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே இந்தப் பயிற்சி இன்று ஆரம்பமாகவுள்ளது. வரும் 6ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும்.

கடல்சார் பாதுகாப்பு முன்னுரிமைகள், படைகளுக்கிடையிலான இயங்குதன்மையை வலுப்படுத்தல், தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய நாடுகளின் படைகளுக்கிடையில் நிலையான கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.

இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கேற்க அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் கொரனாடோ என்ற போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வரவுள்ளது.

No comments

Powered by Blogger.