கட்டாரின் நெருக்கடியும், ஹமாஸ் - பதா நெருக்கத்திற்கு காரணமாகியது. “போலியான சூட்சுமம் என்கிறது இஸ்ரேல்
-Hassan Iqbal-
பலஸ்தீனின் பிரதான அரசியல் தரப்புகளான ஹமாஸ் மற்றும் பதாஹ் ஆகியவற்றுக்கிடையில் சுமார் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக நீடித்து வந்த பகையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நேற்றைய தினம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எகிப்தின் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளின் இறுதியிலேயே நேற்று மாலை இரு தரப்பினரும் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதற்கமைய 2011 இல் இரு தரப்புகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒற்றுமைக்கான உடன்படிக்கையை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எகிப்துக்கும் காஸாவுக்குமிடையிலான ரபா எல்லையில் பலஸ்தீன அதிகார சபையின் கீழ் வரும் படையினர் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட இரு தரப்பும் இணங்கியுள்ளதாக பேச்சுவார்த்தையில் பதாஹ் தரப்புக்கு தலைமை வகித்த அஸ்ஸலாம் அல் அஹமத் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனின் கனவை வெற்றி கொள்வதற்கும் அதன் இறைமையைப் பாதுகாத்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதற்கும் சுதந்திரமான இறைமையுள்ள கிழக்கும் ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இரு தரப்பினரும் உடன்பாடு கண்டுள்ளோம் என்றும் அஸ்ஸலாம் அல் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாட்டை எட்டச் செய்வதில் எகிப்து வகித்த உறுதியான பங்கை தாம் வரவேற்பதாக பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தரப்புக்கு தலைமை வகித்த சாலிஹ் அல் அரோரி குறிப்பிட்டுள்ளார்.
இவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் பாராளுமன்ற ஜனாதிபதி மற்றும் தேசிய கவுன்சில் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் வரை இரு தரப்பும் இணைந்த இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
பலஸ்தீன் நாட்டின் இரு தரப்புக்களான பதாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
மேற்குலகின் மையநீரோட்ட செல்வாக்கு நிரம்பியதாக கருதப்படும் பதாஹ் கட்சியானது, மேற்குலகம் மற்றும் இஸ்ரேலினால் தீவிரவாத அமைப்பு என்று வர்ணிக்கப்படும் ஹமாஸிடம் 2007 இல் பலஸ்தீனின் காஸா பகுதியின் ஆளுகையை இழந்தது.
கடந்த மாதம் எகிப்தின் மத்தியஸ்தத்தின் கீழ் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காஸா பகுதியின் ஆளும் அதிகாரத்தை பதாஹ் கட்சியை சேர்ந்த பலஸ்தீன ஜனாபதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் கையளிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டது.
இருதரப்புகளின் இணக்கப்பாடு தொடர்பில் மேலதிக முன்னெடுப்புக்களை உத்தியோகபூர்வமாக அமுலுக்கு கொண்டுவரும் வகையில் மத்தியஸ்த நாடான எகிப்து 3 நாள் பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பித்தது. “தேசிய இணக்கப்பாடு தொடர்பில் கெய்ரோ பேச்சுவார்த்தையில் உறுதியானதும் தீர்க்கமானதுமான முடிவுகள் பெறப்படும்” என ஹமாஸ் உயரதிகாரி இஸ்ஸத் ரஷிக் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட முன்னர் தெரிவித்திருந்தார்.
“பலஸ்தீனிய மக்களின் ஐக்கியமும் தேசிய இணக்கப்பாடுமே நாம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான தந்திரோபாயம்” என பதாஹ் கட்சியின் முக்கிய தலைமைகளில் ஒருவரான அஸ்ஸாம் அஹ்மத் தெரிவித்துள்ளார். காஸாவில் இயங்கி வரும் அமைச்சுக்களின் நிர்வாகம் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஹமாஸ் அமைப்பினால் பணியமர்த்தப்பட்டுள்ள 40,000 தொடக்கம் 50,000 பணியாளர்களின் நிலைப்பாடு தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
காஸா பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரமும் கலந்துரையாடலில் முக்கிய இடம் பெற்றிருந்தது. இப் பேச்சுக்களைத் தொடர்ந்து காஸா பொலிஸ் படையணியில் பதாஹ் ஆதரவான 3,000 பாதுகாப்பு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஸா பகுதியில் வாழும் 2 மில்லியன் மக்கள் உலகுடன் தரை வழித் தொடர்பை பேணும் வகையில் அமைந்துள்ள ஒரேயொரு எல்லைக் கடவையான ரபா, ஹமாஸ் ஆதரவு அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படுவதற்கு பதிலாக பதாஹ் ஆதரவு அதிகாரிகளினால் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும், நிர்வாக நடவடிக்கைகள் ஐரோப்பிய எல்லை ஒன்றிய முகவரகத்தினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் எனவும் பதாஹ் பிரதிநிதி அஹ்மத் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீனின் இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை “போலியான, சூட்சுமம் நிறைந்த பேச்சுவார்த்தை” என வர்ணித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யகு, ஹமாஸ் இராணுவ அமைப்பின் ஆயுதக் களைவு தொடர்பில் இஸ்ரேலின் கோரிக்கையை மீளவும் வலியுறுத்துவதாகவே இப்பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஹமாஸ், இப்பேச்சுவார்த்தை தமது ஆயுத களைவு தொடர்பிலான கலந்துரையாடல்களை உள்ளடக்காது என தெரிவித்துள்ளது.
காஸா பகுதியின் நிர்வாக அதிகாரங்களை பதாஹ்விடம் மீளக் கையளிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளமையானது ஹமாஸின் பாரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸின் முக்கிய நிதி மூலமான கட்டார் பிராந்திய நெருக்கடிகளில் சிக்கியிருப்பதும் இம்முன்னெடுப்புக்கு வழிவகுத்த முக்கிய காரணியாக கருதப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு நிதிநெருக்கடி மற்றும் அரசியல் தனிமைப்படுத்தப்படல்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனும் அச்சமும் ஏதுவான காரணியாக அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸா எல்லைகளின் நிர்வாக அதிகாரம் பதாஹ் ஆதரவு அதிகாரிகளிடம் மீளக் கையளிக்கப்படும் நிகழ்வானது, இஸ்ரேல் மற்றும் எகிப்தின் எல்லைக் கட்டுப்பாடுகளை இலகுபடுத்துவதாக அமைவதோடு விரைவில் காஸா பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு அது வித்திடும் என ஹமாஸ், பதாஹ் ஆகிய இரு தரப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடாத்துவதற்கான காலப்பகுதியை திட்டமிடுவது தொடர்பிலும், இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பான பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) மீள் நிர்மாணம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இறுதியாக 2006 இல் இடம்பெற்ற பலஸ்தீன பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் அதிர்ச்சி வெற்றியை பெற்றிருந்தது. ஹமாஸின் இவ்வெற்றியானது ஹமாஸ், பதாஹ் இடையே அரசியல் முறுகல் நிலையை அதிகரிக்கச் செய்தது எனவும், இதன் விளைவாகவே 2007 இல் காஸா உள்ளக கிளர்ச்சி ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.
காஸா மற்றும் மேற்கு கரையின் நிர்வாக அதிகாரங்களை இரு தரப்புக்கும் இடையே பகிர்ந்தளிப்பது மற்றும் இருதரப்புக்கும் இடையே சமரச இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எகிப்து பலமுறை முயற்சிகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு இருப்பினும் யஹூதிகள் ஓடி ஒளியும் நாள் தொலைவிலில்லை..انشا ا الله...
ReplyDelete