ஹஜ் செல்லும் போது சவூதி + கட்டார் குறித்து விமர்சிக்காதீர்கள் - அமைச்சர் ஹலீம் அறிவுரை
-ARA.Fareel-
இலங்கை ஹஜ்யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலத்தில் சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவிவரும் முரண்பாடுகளை தங்களுக்குள் விமர்சிக்கவோ, சவூதி அரேபியா உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடவோ கூடாது என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அமைச்சர் ஹலீம் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
‘கட்டார் நாட்டுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக இருநாட்டு உறவுகளும் பாதிப்புக்களுக்குள்ளாகியுள்ளன. இதேவேளை சவூதி மக்கா, மதீனாவில் அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கட்டாருக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான உறவு பாதிப்புக்குள்ளாகியிருக்கிற நிலையில் சவூதியில் மக்கா, மதீனாவில் விமான நிலையங்களில் உளவுப் பிரிவின் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ், உருது மற்றும் அரபுமொழி பேசக்கூடியவர்களாவர்.
எனவே எமது ஹஜ்யாத்திரிகள் கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவிவரும் பிரச்சினை தொடர்பாக எவருடனும் கலந்துரையாடக்கூடாது. மற்றும் இந்தப் பிரச்சினை தொடர்பாக விமர்சிக்கக் கூடாது.
ஒரு நாட்டை ஆதரித்துப்பேசவோ, ஒருநாட்டை எதிர்த்துப் பேசுவதோ தவிர்க்கப்படவேண்டும் மற்றும் ஐ.எஸ்.தீவிரவாதக் குழு தொடர்பாக கருத்து வெளியிடவோ விவாதிக்கவோ கூடாது. எவரது கருத்துகள், பேச்சுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுமாயின் சவூதியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள விஷேடப் பாதுகாப்புப் பிரிவினர் அவ்வாறானவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தவுள்ளார்கள்.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் இலக்கு அமல் செய்வதாக மாத்திரமே இருக்கவேண்டும். சவூதி, கட்டார் மற்றும் ஏனைய நாடுகளின் செயற்பாடுகளை விமர்சிப்பதாக இருக்கக்கூடாது.
ஹஜ் யாத்திரிகர்கள் தமது நாவினைப் பேணி நடந்து கொள்வது அவசியமாகும். நாம் வெளியிடும் அல்லது விமர்சிக்கும் கருத்துகளில் சந்தேகம் ஏற்பட்டால் சவூதி அரசாங்கம் கைது செய்து விசாரணை நடாத்தும். எனவே ஹஜ்யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவின் சட்ட திட்டங்களை மதித்து தமது ஹஜ் கடமையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment