Header Ads



முஸ்லிம்களிடையே அடிப்படைவாதிகளா.. ? கபீருக்கு அஸ்வர் பதிலடி

முஸ்லிம்களுக்குள் அடிப்படைவாதிகள் இருப்பதாகக் கூறுவது பொதுபலசேனா போன்ற இனவிரோத சக்திகளின் வாய்களில் அவல் போட்டது போன்று இருக்கும் என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான  ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

அரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாசிம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானம் என்று தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக இன்று (28) கொழும்பில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி  செய்தியாளர் மாநாட்டின் போது,   அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,

ஆயிரம் பொய் சொல்லி அரசாங்கத்தைக் கைப்பற்றிய இந்த நல்லரசு என்று சொல்லப்படுகின்ற பொல்லரசுக்கு முஸ்லிம்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அமைச்சர்களும் கையாளாதவர்களாக இப்போது ஆகிவிட்டனர். ஆகவே அதற்குப் பரிகாரம் தேடாமல், முஸ்லிம்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்காமல் இவர்கள் முஸ்லிம்களுக்குள் அடிப்படைத் தீவிரவாதிகள் இருப்பதாக கூறுவது மிகவும் அபத்தமான கூற்றாகும். 

முஸ்லிம்கள் பின்பற்றுவது அடிப்படையான இஸ்லாமிய கொள்கைளைத்தான். எனினும், தனிப்பட்ட நபர்கள் செய்கின்ற குற்றங்களுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கலாம், தண்டனை விதிக்கலாம். அதை விடுத்து முஸ்லிம்களுக்குள் தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல்லுவது, இதுபோன்று கூறி வருகின்ற பொதுபல சேனா போன்ற இனவிரோத சக்திகளுக்கு வாய்களில் அவல் போட்ட விஷயமாகத்தான் நாம் இதனைப் பார்க்க முடிகின்றது.

எனவே, இதனை அவர் வாபஸ் பெற வேண்டும். இப்படியாக செய்வதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தையே இழிவு படுத்துவதாக அமையும் என நாங்கள் கருதுகிறோம் என்றும் தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

No comments

Powered by Blogger.