Header Ads



அமெரிக்காவை தாக்கிய மேத்யூ - 15 லட்சம் மக்கள் பாதிப்பு - ஒபாமாவால் அவசரநிலை பிரகடனம்

-Maalai Malar-

அமெரிக்காவில் புயல் தாக்கியதில் 339 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அங்குள்ள புளோரிடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது.

இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹெய்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.

இதனால், பலத்த மழை கொட்டியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கியாஸ் நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.இதனால் ஏராளமான வாகனங்கள் ஓடாமல் ரோட்டோரம் வரிசையாக நிற்கின்றன. கியாஸ் நிரப்பும் நிலையங்களில் காத்து கிடக்கின்றன.

உணவு பொருட்கள் சப்ளை இல்லாததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.புளோரிடாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே 15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் அவசர கால குழுக்கள் இங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனவே, புளோரிடாவில் அதிபர் ஒபாமா அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

ஜர்ஷியா, மற்றும் தெற்கு கரோலினாவிலும் 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகம் பாதித்த புளோரிடாவில் 60 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் இருந்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டு அவை மூடப்பட்டன.

புளோரிடாவில் உள்ள மியாமி, போர்ட்லவுடர்யில் மற்றும் ஒர்லண்டோ உள்ளிட்ட நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தாக்கிய ‘மேத்யூ’ புயலுக்கு இதுவரை 339 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்ததில் சிக்கியவர்கள் ஆவர்.

மேத்யூ’ புயல் தாக்குதலில் கெய்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான மரங்கள் வேருடன் பிடுங்கி தூக்கி வீசப்பட்டன. இங்கு புயல் மழைக்கு 136 பேர் உயிரிழந்தனர்.

பகாமாஸ் நாட்டில் தலைநகர் நஸ்காயு நகரில் மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது.

ஏராளமான பேரீச்சை உள்ளிட்ட மரங்கள் வேருடன் பிடுங்கி காற்றில் அடித்து வரப்பட்டு வீடுகள் மீது விழுந்தது.

No comments

Powered by Blogger.