கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம், போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுகிறதா..?
இந்தியாவுக்குள் போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முக்கிய பங்கை வகிப்பதாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு முகவரமைப்புகள் கண்டறிந்துள்ளன.
பாகிஸ்தானில் உள்ள செயற்பாட்டாளர்கள், சீனா வழியாக, சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு இராஜதந்திரப் பொதிகள் மூலம் போலி இந்திய நாணயத்தாள்களை அனுப்பி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு டிஎச்எல் மற்றும் பெடெக்ஸ் ஆகிய இரண்டு பொதி அனுப்பும் முகவர் நிறுவனங்களும் உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், நடைபெற்ற பொருளாதாரப் புலனாய்வுச் சபையின் கூட்டத்தில் இதுபற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக மட்டுமன்றி, நேபாளம், சீனா வழியாகவும், போலி இந்திய நாணயத்தாள்கள் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட இந்த போலி இந்திய நாணயத்தாள்களை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுவதற்கான வழிகளாக சிறிலங்கா, நேபாளம், பங்களாதேஸ் ஆகிய அயல் நாடுகள் பயன்படுத்தப்படுவதாகவும் இந்தக் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment