Header Ads



இலங்கைக்கு சிறப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு சான்றிதழை வழங்கிய WHO


மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை வெற்றிகரமாக ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வருவதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு சிறப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

 

திமோர்-லெஸ்தேயின் டிலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது அமர்வின் போது சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் இந்த மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸினால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பதிகாரி கலாநிதி நிலேஷ் புத்தா என்பவரின் கையொப்பத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளது.

 

இலங்கை 2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் மலேரியா அற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது. அன்றிலிருந்து 10 ஆண்டுகள் முழுவதும் நாட்டிற்குள் மலேரியா மீண்டும் பரவுவதைத் தடுத்து, அந்த நிலையைத் தொடர்ந்து பேணி வந்தமை இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

மாலத்தீவுக்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடு இலங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன், தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி நோயை வெற்றிகரமாக ஒழித்த நிலையையும் இலங்கை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வந்தமை இதன்போது பாராட்டப்பட்டுள்ளது.

 

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக வழங்கப்படும் ரணஜன்னி தடுப்பூசி திட்டமும் நாடு முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இலங்கை பெற்றுள்ள வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட ஆரம்ப சுகாதார அமைப்பு, தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் திறமையான நோய் புலனாய்வு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்த சுகாதார சாதனைகளை எட்ட முடிந்தது என்றும், அவற்றை நீண்டகாலம் பேண முடிந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த சாதனைகள் வெறும் சுகாதார மைல்கற்கள் மட்டுமல்ல, இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதையும் மேலும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதையும் உறுதி செய்வதாக உலக சுகாதார அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.