Header Ads



ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா வழங்கிய ஆதரவை விசேடமாகப் பாராட்டிய ஜனாதிபதி


இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு, பொருளாதாரம், சமுத்திர மற்றும் பிராந்திய பங்களிப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகள் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் மேலும் வலுப்படுத்தப்படுவது குறித்து இதன்போது ஜனாதிபதிக்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.


குறிப்பாக, இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசியத் திட்டம் குறித்து ஜனாதிபதி இங்கு விளக்கமளித்ததுடன், இந்து சமுத்திர பிராந்தியம் போதைப்பொருள் வர்த்தகங்களின் மையமாக மாறியுள்ளதால், போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.


கடந்த காலங்களில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது விசேடமாகப் பாராட்டினார்.


இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்காக இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்தியத் தேவைகளுக்காக இலங்கை தனது முடிவுகளை  எடுக்கும்போதும், ஒரு இறையாண்மையுள்ள நாடாக உலகின் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் இணைகின்றபோதும் பிராந்தியத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே  செயற்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.