Header Ads



“நான் உங்கள் தோளில் கையை வைக்கலாமா?” என்றுகேட்ட சஜித் - பாராட்டும் வைத்தியர்


சிறுவர்களுடன் உடல்ரீதியான தொடர்புகள் குறித்து விவாதிக்கும்போது சிறுவர்களின் சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சிறுவர் உரிமைகள் ஆர்வலரும், 'Stop Child Cruelty Trust' அமைப்பின் தலைவருமான மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.


“நல்ல தொடுதல், தவறான தொடுதல்” என்ற கருத்துக்கு அப்பால், தன்னைத் தொடுவதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் உரிமையும் சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசியல்வாதிகள் மற்றும் சிறுவர்கள் இடம்பெறும் சில நிழற்படங்களை சுட்டிக்காட்டிய அவர், சிறுவர்களின் சம்மதம் அல்லது விருப்பம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் தொடர்பும் பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு மனுவொன்றை சமர்ப்பிக்க வந்த சிறுமியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நான் உங்கள் தோளில் கையை வைக்கலாமா?” எனக் கேட்டு, சிறுமியின் சம்மதத்தைப் பெற்ற பின்னரே அவ்வாறு செய்த சம்பவத்தை அவர் பாராட்டியுள்ளார்.


சிறுவர்களின் விருப்பத்தை மதிப்பதற்கான சிறந்த உதாரணமாக இது அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத விடயங்களுக்கு “இல்லை” என்று கூறும் உரிமையை வழங்குவது அவர்களை வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சிறுவர்களின் விருப்பத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் தொடுதலும், அவர்களின் உரிமையை மீறும் செயலாகவோ அல்லது பொருத்தமற்ற தொடுதலாகவோ கருதப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், நாட்டில் நடைமுறையில் உள்ள சிறுவர்கள் பாதுகாப்புக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை எனவும், சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் பெரியவர்களும் அரசியல்வாதிகளும் போதிய விழிப்புணர்வுடன் செயற்படுவது மிகவும் அவசியம் எனவும் மருத்தவுர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.