தண்ணீர் என நினைத்து திரவமொன்றை குடித்த சிறுமி உயிரிழப்பு - கம்பளையில் சோகம்
கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து திரவமொன்றை குடித்து உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினர் அனைவரும் நேற்று மதியம் மற்றும் மாலையில் வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று அங்கு ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் எனத் தவறாக நினைத்துக் குடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதன்போது, வவுனியாவின் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்கரன் ஹயனிகா என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment