Header Ads



பழுகந்தாவ பிரதேச முதலாவது, ஹாபிழை கௌரவிக்கும் நிகழ்வு - விகாராதிபதி வாழ்த்து


கல்கமுவ, பழுகந்தாவ பிரதேசத்தின் முதலாவது ஹாபிழை கௌரவிக்கின்ற நிகழ்வு நேற்று (2025.07.27) இடம்பெற்றது.  பழுகந்தாவ மஸ்ஜிதுல் முஸ்தபா பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வை முஸ்தபா குர்ஆன் மத்ரஸாவின் முஅல்லிம் அஷ்ஷேக் அரூஸ் (புர்கானி) நெறிப்படுத்தியிருந்தார். 


பல ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த ஊரில் சுமார் 70 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர்.  இந்த ஊரிலிருந்து உருவாகிய முதலாவது குர்ஆனை சுமந்த ஹாபிழை கௌரவிக்க வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  


அப்துல் லதீப் மொஹமட் ஹிஜாஸ், கொட்டராமுல்ல, மின்ஹாஜியா அரபுக் கல்லூரியில் குர்ஆன் மனனப்பிரிவில் இணைந்து சுமார் 3 வருடங்களில் குர்ஆனை மனனம் செய்து இந்த ஊரின் முதலாவது ஹாபிழ் என்ற பெயரை தனதாக்கிக் கொண்டார்.  


இந்நிகழ்வில் பிரதேச மக்கள் யாவரும் அதிதியாக அழைக்கப்பட்டிருந்ததோடு, மின்ஹாஜியா அரபுக் கலாசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


நிகழ்வில் சிறப்பதிதியாக பழுகந்தாவ பௌத்த விகாரையின் விகாராதிபதி  தேரர் கலந்து கொண்டிருந்தார். குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் ஹிஜாஸை வாழ்த்தியதோடு பிரதேச பௌத்த மக்கள் சார்பாக  மொரட்டுவ தம்மசித்தி தேரர் நினைவுச் சின்னம் ஒன்றையும் ஹிஜாஸுக்கு வழங்கி கௌரவித்திருந்தார்.  


முஸ்தபா குர்ஆன் மத்ரஸா மாணவர்களது கலைவிழா நிகழ்வுகளும் மேடையில் இடம்பெற்றிருந்தன.








No comments

Powered by Blogger.