Header Ads



உழ்ஹிய்யாவின் போது பிற சமூகங்களை தூண்டாதீர்கள் - போட்டோ, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிராதீர்கள்


உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் 'உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.' (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.

இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வதுடன், எமது நாட்டில் நடைமுறையிலுள்ள விலங்குச் சட்டம் (Animal Act No. 29 of 1958) கூறும் விடயங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கின்றது.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஒட்டகம் கிடைக்கப்பெறாமையினால் ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும். அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது. இது பற்றிய ஜம்இய்யாவின் வழிகாட்டல் இவ்விணைப்பில் காணப்படுகின்றது. (https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1734-2019-08-05-11-45-09

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்

1. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்ஹஜ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

2. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்குத் தேவையான நேரம் சென்றதிலிருந்து துல்ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

3. ஓர் ஒட்டகம் அல்லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் மாத்திரமே கூட்டுச்சேர முடியும். ஏழு நபர்கள் இணைந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவதை விட, தனித்தனியாக ஒவ்வொருவரும், ஓர் ஆட்டை அல்லது ஒரு மாட்;டை அவரவர் வசதிக்கேற்ப உழ்ஹிய்யா கொடுப்பது ஏற்றமானதாகும். குடும்பத்திலுள்ள பொறுப்பாளர் ஒரு ஆட்டை அல்லது மாடு, ஒட்டகத்திலிருந்து ஏழிலொரு பங்கை உழ்ஹிய்யாவாக கொடுப்பது தன் குடும்பம் சார்பாக போதுமாகி விடும். என்றாலும் தனித்தனியாக கொடுப்பது சிறந்ததாகும். இச்சிறப்பினை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் தனது சக்திக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.

4. எப்பிரதேசங்களில் மாடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவது சிரமமாக உள்ளதோ, அப்பிரதேசங்களில் ஆடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றிக் கொள்ளவும்

5. பலர் ஒன்றுசேர்ந்து கூட்டாக உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் போது பேணப்பட வேண்டிய ஒழுங்குகள் பற்றிய ஜம்இய்யாவின் வழிகாட்டல் இவ்விணைப்பில் காணப்படுகின்றது. அவற்றை சரிவர பின்பற்றி செயற்படல் வேண்டும். (https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1380-2018-08-17-12-38-25)

6. நம் நாட்டின் சட்டத்தை கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்

7. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும், அனுமதி பெற்றதை விட கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

8. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது.

9. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்

10. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி, கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.

11. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்றைக் கிடத்தி அறுக்கக் கூடாது.

12. குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்களை அகற்றும் போது சுகாதார விதிமுறைகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.

13. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்தில் கிருமி நாசினிகளைத் தெளித்து சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.

14. பல்லின மக்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.

15. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று உழ்ஹிய்யா நிறைவேற்றுவதை கண்டிப்பாக தவிர்ந்துக் கொள்வதோடு, ஏனைய நாட்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

16. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் அவற்றைப் பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்

பள்ளிவாயல் இமாம்கள், கதீப்மார்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லின மக்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

அஷ்ஷைக் எம்.ஏ.ஸி.எம். பாழில்

பதில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முக்கிய குறிப்பு: நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள இச்சூழ்நிலையில் உழ்ஹிய்யா இறைச்சியை பகிர்ந்தளிக்கும் போது அவற்றை சமைத்துண்பதற்குத் தேவையான அரிசி போன்ற அத்தியவசியப் பொருட்களையும் மேலதிக சதகாவாக கொடுப்பதற்கு முடியுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜம்இய்யா உரியவர்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

No comments

Powered by Blogger.