பள்ளிவாசல்களில் ஜீன்ஸ் வில்லன்களின் ஆபாசம், இப்படி வருகிறவர்களை என்ன செய்யலாம்...?
- Hameed Sac -
#இறையில்லத்தில்_விரசம்_ஆபாசம்_செய்வோர்:
நெஞ்சத்தில் பரிபூரணமான இறை நினைவுடன், ஆண்டவனின் பேரருள் தேடி இறையில்லங்களுக்கு வருவோருக்கு மிகப் பெரும் அசூசையையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது இந்த ஜீன்ஸ் வில்லன்களின் ஆபாசம்.
ஒரு பக்கம் இறை வேதம் ஒலித்துக் கொண்டிருக்க மறு பக்கம் நமது கண் எதிரே இந்த ஆபாசம்.
இன்று (27) ஜூம்மாவில், நமது பக்கத்தில் அமர்ந்திருந்த எண்பது வயது மதிக்கத்தக்க பெரியவர், அமைதியாக நம்மைச் சுரண்டி, பயந்து கொண்டே தன் பொக்கை வாய் திறந்து மிகுந்த வேதனையுடன் "தம்பி அங்க பாருங்க. அல்லாஹ்வுடைய பள்ளிக்கு வந்துட்டு எப்படி ஆபாசம், அசிங்கம் பண்றாங்க பாருங்க. மனசுக்கு வேதனையா இருக்கு. தயவுசெஞ்சி கொஞ்சம் எடுத்து சொல்லுங்க. இல்லாட்டி நம் கண்ணை விட்டு எங்காவது போய்த் தொலையட்டும்" என்றார்.
மெதுவாக எழுந்து அந்த ரோமியோவை அழைத்து "பிரதர் உங்கள் ஆடைகள் விலகி உங்கள் பின்புறம் ஆபாசமாகத் தெரிகிறது. இறையில்லத்திற்கு வருகிறீர்கள். கண்ணியமாக வர வேண்டாமா? இப்படி ஆபாசமாக வரலாமா. அட்லீஸ்ட் உள் பனியனாவது அணியாலா மில்ல" என்றவுடன் "சாரி சார் சாரி சார்" என்று கூறி தன் ஆடையை சரி செய்கிறார் அந்த ரோமியோ.
பத்தே நிமிடத்தில் பொசிஷன் மாறி உட்காருகிறார்.
மீண்டும் அதே ஆபாசம். ஆண்டவனின் அருள் தேடி வந்த இடத்தில் பொறுமையிழந்து நம் கவனம் சிதறுகிறது. குணம் மாறுகிறது.
பெண்களுக்கு உடை சம்பந்தப்பட்ட பலப்பல சட்ட திட்டங்களை தினமும் கூறுகிறோம்.
இந்த ஜீன்ஸ் ரோமியோக்களுக்கு கூறுகிறோமா?
படைத்தவனை தொழ இறையில்லம் வந்தோரின் கோபத்தைக் கிளறும் இந்த ஆபாசப் பேர்வழிகளை தடுத்து நிறுத்த பள்ளி வாசல்கள் நிர்வாகம் முன் வர வேண்டும். முடிவு காண வேண்டும்.
ஜூம்மா முடிந்து, பள்ளி வாசல் நிர்வாகத்தை சந்தித்து நம் ஆதங்கத்தைப் பகர்கிறோம்.
"பல ஆயிரம் முறை கம்ப்ளைண்ட் வந்தாச்சு ஹாஜி. இப்படி வருகிறவர்களை என்ன செய்யலாம்?" என்று நம்மிடமே திருப்பிக் கேட்கிறார்.
"மஸ்ஜிதில், இது குறித்து முன்னறிவிப்பு அட்டைகளை ஆங்காங்கே தொங்க விடுங்கள். முன்னறிவிப்பு செய்யுங்கள். அதையும் மீறி இவ்வாறு ஆபாசமாக ஆடை அணிந்து வருபவர்களை, தயவு தாட்சயண்மின்றி பள்ளி வாசலை விட்டு வெளியேற்றுங்கள்'' என்று கூறிவிட்டு நகர்ந்தோம்.
Post a Comment