அடுத்த பிரதமர் யார்..??
பாராளுமன்ற அமர்வில் நேற்றையதினம் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்து பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தகட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போதே இன்றைய தினம் மீண்டும் பெரும்பான்மை பலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை திருத்தி மீண்டும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக வாக்கெடுப்புக்கு விடுமாறும் அது நிறைவேற்றப்பட்டால் அதனை தான் பரிசீலிப்பதாகவும் அது தொடர்பில் அரசியலமைப்புக்கு உட்பட்டு செயற்படுவதாகவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு சில தினங்களில் தீர்வுகாணப்படும் என்றும் பெரும்பான்மை பலம் உள்ள தரப்புக்கு அரசாங்கம் அமைக்க தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Post a Comment