Header Ads



YLS ஹமீட் தலைமையில், மக்கள் காங்கிரஸ் உயர்பீடக்கூட்டம் - தீர்மானங்களும் நிறைவேற்றம்

(எஸ்.அஷ்ரப்கான்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் அதன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று (திங்கள்-11.04.2016) மாலை கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில் கொழும்பில் நடைபெற்றதாக கட்சியின் தேசிய இணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு சீர் திருத்தத்திற்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஏகமானதான ஒரு யோசனை சமர்ப்பிக்கப்படுவதன் அவசியம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

அதேநேரம் முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுக்கு தேசியத் தலைவர் பட்டம் சூடிக் கொள்வதில் காட்டுகின்ற அக்கறை அரசியலமைப்பு தொடர்பாக ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதில் இல்லாமல் இருப்பது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதிகாரப் பகிர்வு என்பது நிலப்பிராந்தியத்திற்கே வழங்கப்படுகின்றது. அது மாகாணங்களாக இருக்கலாம் மாநிலங்களாக இருக்கலாம். ஆனால் எந்தவொரு மாகாணத்திலும் நிலசார் சமூகமாக முஸ்லிம்கள் இல்லை. (Territorial community) இந்நிலையில் வழங்கப்படுகின்ற அதிகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கப்போவதில்லை. அதே நேரம் வட கிழக்கில் தமிழர்கள் நிலசார் சமூகமாக இருப்பதால் அப்பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரம் அச்சமூகத்திற்கு வழங்கப்படுகின்ற அதிகாரமாக மாறுகின்றது. சுருங்கக் கூறின், இதுவரை மத்தியில் இருக்கின்ற ஒரு அரசாங்கத்தினால் சகல சமூகங்களும் ஆளப்பட்ட  நிலைமை மாறி, பத்து அரசாங்கங்களினால் முஸ்லிம்கள் மட்டும் ஆளப்பட ஏனைய சமூகங்கள் நிலசார் சமூகமாக இருக்கின்ற காரணத்தினால் தங்களைத் தாங்களே ஆள முஸ்லிம் சமூகம் ஆளப்படுகின்ற சமூகமாக மாறப்போகின்றது.

இந்தப் பின்னணியில்தான் அரசியல் அமைப்புத் திருத்தத்தின் ஒரு பிரதான அங்கமான அதிகாரப் பகிர்வை முஸ்லிம்கள் பார்க்கவேண்டியிருக்கின்றது.  அன்மையில் சம்மந்தன் ஐயா அவர்கள் முஸ்லிம்கள் அதிகாரம் கோரவில்லை, தமிழர்களே அதிகாரத்திற்காக போராடினார்கள் என்று  தெரிவித்திருந்தார். இது காலாகாலமாக தமிழ்த் தரப்பினர் தெரிவித்து வருகின்ற கருத்தாகும். முஸ்லிம்கள் அதிகாரம் கோராததன் காரணம் அதிகாரப் பகிர்வு முஸ்லிம்களுக்கு எதிரானதும் பாதகமானதுமாகும் எனபதனால்தான் என்பதனை இவர்கள் புரிந்துவிடத் தவறி விடுகின்றார்கள்.

முஸ்லிம்கள் நிலசார் சமூகமாக இல்லாத சூழ்நிலையில் அதிகாரப் பகிர்வின் மூலம் முஸ்லிம்கள் ஆளப்படுகின்ற சமூகமாக மாற்றப்படக் கூடிய சூழ்நிலையில் அந்த அதிகாரப்பகிர்வின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைதான் முஸ்லிம்களையும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேச வைக்கின்றது. அதாவது யாருக்கும் அதிகாரப்பகிர்வு வழங்காவிட்டால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்ற ஒன்று பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனவே அதிகாரப்பகிர்வு வழங்கப்படுகின்றபொழுது முஸ்லிம்கள் எடுக்கக்கூடிய நிலைப்பாடு அதிகாரப்பகிர்வை முழுமையாக எதிர்ப்பது அல்லது ஆகக் குறைந்தது அதனால் ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிரான காத்திரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, எனவே இந்த விடயம் தொடர்பாக அக்கறையில்லாது முஸ்லிம் கட்சிகள் தங்களது அரசியல் வியாபாரங்களிலே குறியாக இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை தட்டி எழுப்பி ஒரு பொதுவான நிலைப்பாட்டை அடைய முயற்சி எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமென்று உயர்பீட அங்கத்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது.

$ அரசியல் அமைப்பு சீர்திருத்தம், குறிப்பாக அதிகாரப் பகிர்வு மற்றும் தேர்தல் சீர்திருத்தம் போன்றவை தொடர்பாக எமது கட்சி ஜம்இய்யதுல் உலமா உட்பட பிரதான சிவில் சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாடும்.

$ அதிகாரப்பகிர்வில் இன்று சர்வதேசத்தின் மறைமுக கரங்களும் சம்மந்தப்பட்டிருக்கின்ற நிலையில் வெளிநாட்டுத் துதுவர்களை குறிப்பாக முஸ்லிம் நாடுகளது, மேற்கு நாடுகளது மற்றும் இந்தியாவினது துதுவர்களைச் சந்தித்து அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமையை புரிய வைப்பதோடு, அதிகாரப் பகிர்வு முஸ்லிம்களைப் பாதிக்காத விதத்தில் செயற்படுத்தப்படுவதற்காக சர்வதேச அனுசரணையைக் கோர வேண்டுகோள் முன்வைக்கப்படும்.

     $ இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த அரசியல் கட்சித் தலைமைத்துவங்களை சந்தித்து அவர்களுடனும் இது தொடர்பாக பேசப்படும். ஏனெனில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வு மூலம் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் இதுவரை சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை.  மாறாக முஸ்லிம்களும் ஏட்டிக்குப் போட்டியாக அதிகாரம் கேட்கின்றார்கள் என்கின்ற உணர்வுதான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதனால்தான் பல சந்தர்ப்பங்களில் “ போராடாத முஸ்லிம்களுக்கு அதிகாரமா ” என்ற கேள்வி தமிழ் தரப்பைச் சேர்ந்த பலரால் எழுப்பப்படுகின்றது.

     $ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்திற்கு முஸ்லிம்களின் நிலைப்பாட்டை ஒரு யோசனையாகத் தயாரித்து அது தொடர்பாக ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதான சிவில் சமூக அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்று அவ் யோசனையை ஒரு பொது யோசனையாக அரசுக்கு முன்வைக்கும். ஏனைய முஸ்லிம் கட்சிகள் இதற்கு ஒத்துழைக்காவிட்டால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதனை தனது சொந்த யோசனையாக அரசுக்கு முன்வைக்கும்.

     # இது தொடர்பாக மக்களை தெளிவூட்டுகின்ற நடவடிக்கைகளை பிரதேச ரீதியாக மேற்கொள்ளும்.

     # கட்சியின் பெயரால் தன்னை வளர்க்கும் நடிகர்களையும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் புறம் தள்ளி இந்த இக்கட்டான கால கட்டத்தில் இதய சுத்தியுடன் சமூகத்தின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, கட்சியின் நடவடிக்கைகளை சகல பிரதேசங்களிலும் உறுதியாகச் செயற்படுத்த, கட்சியின் உயர்பீட வழிகாட்டலில் இயங்குகின்ற ஒரு செயலணி ஸ்தாபிக்கப்படும். இதில் ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் தியாக சிந்தனையோடு செயற்படக்கூடியவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

அன்று இலங்கை–இந்திய ஒப்பந்தம் எவ்வாறு முஸ்லிம்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியதோ அதை விடவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த அரசியல் அமைப்பு மாற்ற விடயத்தில் முஸ்லிம்கள் மாட்டியிருக்கின்ற நிலையில், முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டு இவ்விடயங்களில் நேர்மையான அக்கறை ஏதும் இல்லாமல் பசப்பு வார்த்தைகளை மாத்திரம் கூறிக் கொண்டு திரிகின்றவர்களுக்கு மத்தியில் மறைந்த தலைவரின் போராட்டத்தை மீண்டும் துய்மையான நோக்கத்தோடு முன்னெடுத்துச் செல்லக்கூடிய தேவை காலத்தின் கட்டாயமாக இன்று மாறியிருக்கின்றது.

எனவே எமது இந்த துய பயணத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் எமக்கு இந்தப் போராட்டத்தில் உரமூட்ட முன்வர வேண்டும்.

அன்று முஸ்லிம்களுக்கென்று கட்சிகள் இல்லாமல் பேசாமடந்தைகளாக இருந்தோம். இலங்கை-இந்திய ஒப்பந்தமும் 13 வது திருத்தமும் எமது முதுகுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டன.  ஆனால் இன்று முஸ்லிம்களுக்கென்று கட்சிகள் இருந்தும் பேசாமடந்தைகளாக இருந்து புதிய அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களை அடிமைச் சமூகமாக முத்திரை குத்துவதை அனுமதிக்க முடியாது ! அனுமதிக்க முடியாது !! அனுமதிக்க முடியாது !!! என்றும் ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.