19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய நீதிமன்ற விசாரணை நிறைவு - ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் விளக்கம் அனுப்பிவைப்பு
19 வது அரசியல் அமைப்பு சீர் திருத்த தொடர்பான உயர்நீதி மன்ற மனு விசாரணை இன்று 06-04-2015 நிறைவடைந்துள்ளது.
இதற்கு அமைய குறித்த தீர்ப்பு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பவுள்ளதாக பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நிதியரசர்கள் குளாம் தெரிவித்துள்ளது.
உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த சட்ட மூலம் தொடர்பில் 19 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதில் ஐந்து மனுக்கள் சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும், 14 மனுக்கள் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை, இன்றைய தினம் மனு விசாரணை தொடர்பான சட்ட மா அதிபரின் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
19வது அரசியல் அமைப்பு சீர் திருத்தம், மக்கள் கருத்து கணிப்பின்றி, நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன் போது, கருத்துரைத்த பிரதம நீதியரசர், 19வது திருத்த சட்டம் தேசிய ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுவதாக ஜனாதிபதியால் அர்த்தப்படுத்தப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே, தேசிய கொடியானது, தற்போது தேசிய ஒற்றுமையின் சின்னமாக திகழ்கின்றது. எனினும், அந்த நிலைப்பாடு, ஜனாதிபதியின் கருத்துடன் பார்க்கும் போது, முரண்பட்டதாக அமைகின்றது. எனவே, இந்த முக்கிய விடயத்தில் சட்டமா அதிபர் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என பிரதம நீதியரசர் தெரியப்படுத்தினார்.
இதேவேளை, எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் 19வது அரசியல் அமைப்பு சீர் திருத்தம் தொடர்பான விவாதம் ஒன்றை நடத்துவதற்காக நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில், இன்று முற்பகல், விசேட கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர் 19வது அரசியல் அமைப்பு சீர் திருத்தம் தொடர்பான உயர்நீதி மன்ற தீர்ப்பு நாளை மறு தினம் தம்மிடம் கிடைக்க பெறும் என தெரிவித்தார்.

Post a Comment