Header Ads



'பீடிங் பாட்டிலை தூக்கி வீசுங்கள்...'


உள்ளங்கையை குவித்து, குழந்தைகளுக்கு தண்ணீர், பால் பருக வைத்த காலம் மலையேறி விட்டது. அடுத்து, சங்கை பயன்படுத்திய காலகட்டமும்  சத்தமில்லாமல் மறைந்து வருகிறது. இன்று விதவிதமான நிறங்களில், பல ரகங்களில் ஃபீடிங் பாட்டில்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன.  விளைவு..? உதடு, பல் மற்றும் வாய் அமைப் பில் எதிர்பாராத மாற்றங்கள்... ஃபீடிங் பாட்டில் ரப்பரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகளால்   உடலினுள் நோய் உண்டாகும் அபாயம்... இப்படி ஃபீடிங் பாட்டிலில் உள்ள பல பயங்கரங்கள் குறித்து விளக்குகிறார் தாய்ப்பால் ஆலோசகர் ஜெயஸ்ரீ  ஜெயகிருஷ்ணன்.

‘‘குழந்தை நேரிடையாக அம்மாவிடம் பால் குடிக்கும்போது, வாயை நன்றாக திறந்து நாக்கை வெளியே நீட்டியபடி பாலைக் குடிக்கும். ஃபீடிங்  பாட்டிலில் பால் குடிக்கும்போது,  குழந்தைகளின் வாய் குவியும். நாக்கு மடங்கி கொள்ளும். பாட்டில் ஃபீடிங் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளால்  உறிஞ்சி குடிக்க முடியாது. அதன் காரணமாக, பாலை விழுங்கும். மூச்சு விடாமல் குடித்து முடிக்கும். அதனால், பாலை குடித்து முடித்த பிறகு  குழந்தைகளுக்கு மூச்சு இரைக்கும். தாயிடம் பால் குடித்தல், கப்பில் பால் குடித்தல் பழக்கம் இல்லாத குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு போன்ற பல  பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 

பாட்டிலில் பால் அருந்தும்போது, பாலோடு சேர்த்து நிறைய காற்று வயிற்றின் உள்ளே செல்லும். இதனால், பாட்டில் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு  வாயுத்தொல்லை ஏற்பட்டு (Gastric Problem), வயிறு உப்புசத்தால் (Colic) அவதிப்படும். மேலும், பாட்டிலில் பால் குடிக்கும் வழக்கம்  உடைய குழந்தைகள் மாலை 6 மணிக்கு மேல், தொடர்ந்து 2-3 மணிநேரம் அழுது கொண்டே இருக்கும். இதற்காக, குழந்தைகளுக்கு மருந்து (Colic  Drops) கொடுப்பார்கள் . பாட்டிலில் பால் குடித்து பழகிய குழந்தைகளுக்கு மீண்டும் அம்மாவிடம் பால் குடிக்கின்ற விருப்பம் மெல்ல மெல்ல  குறையும். இதனால், நாளடைவில், தாய்மை அடைந்த பெண்களுக்கு பால் சுரப்பது நின்றுவிடும். சங்கில் பால் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ள  குழந்தைகளால்   மீண்டும் அம்மாவிடம் பால் குடிக்க முடியும். அதோடு, குறுகிய காலத்தில் டம்ளரில் பால் குடிக்கவும் பழகிக் கொள்ளும். 

ஃபீடிங் பாட்டிலில் குடிக்க வைப்பது  சுகாதாரமானதும் கிடையாது. கிருமித் தொற்று அதிக அளவில் இருக்கும். அதனால், குழந்தைகளுக்கு  வயிற்றுப்போக்கு உண்டாகும். பல், தாடை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பேச்சு வரத் தாமதம் ஆகும். உச்சரிப்பு சரியாக இருக்காது. பல் வரிசை  மாற வாய்ப்பு உள்ளது. மேலும், பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தலைகாட்டும். இளம் தாய்மார்கள் பலர் பொது இடங்களில் குழந்தைக்கு பால்  புகட்டுவது கஷ்டமான காரியம். அதனால்தான் பாட்டிலில் குடிப்பதற்கு பழக்கப் படுத்துகிறோம் என்று கூறுகின்றனர். அதில் உண்மையில்லை. ரயில்  நிலையம், பேருந்து நிலையம், கடற்கரை, பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதற்கு ஏற்ற  வகையில், பிரத்யேக உடைகள் வந்துவிட்டன.

பாட்டிலில் குடிக்க வைப்பதற்குப் பதிலாக, கப்பில் பால் அருந்த வைப்பது மிகவும் நல்லது. அம்மாவிடம் பால் குடிக்கும் பழக்கம் உடைய  குழந்தைகளுக்கு தாயின் வாசனை, அரவணைப்பு கிடைக்கும். இந்த குழந்தைகள் ரசித்து பாலைக் குடிக்கும். ஃபீடிங் பாட்டில் பழக்கம் உடைய  குழந்தைகளுக்கோ அம்மாவின் வாசனை, அரவணைப்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பு கிடையாது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில்  கொடுக்கப்படுகின்ற கோல்டன் ஹவர்ஸ் ஃபீடிங் (Golden Hours Feeding) மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு கப்பில் பால் புகட்டும்  வழக்கம் நிறைய பேருக்கு தெரிவது கிடையாது. பெரும்பாலான டாக்டர்களுக்கே இது பற்றி தெரிவது இல்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்!’’

No comments

Powered by Blogger.