ஹெல உறுமயவிற்கு, ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு...!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவையும் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதனை இந்த அரசாங்கம் ஒருபோதும் செய்யப் போவதில்லை. எனவே, இந்தத் திட்டத்தை தொடர்ந்தும் வலியுறுத்திவரும் எம்முடன் கைகோர்ப்பதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் உப தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார். இது தொடர் பில் ஐ.தே.கட்சியின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடனும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவி்ல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் அவருக்கு உள்ளது. ஆனால், அதனை அவர் ஒருபோதும் செய்யமாட்டார் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.
அரசாங்கத்திலுள்ள சில இடதுசாரிகள் இதனை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது ஜாதிக ஹெல உறுமயவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென்ற உண்மையான நோக்கமும் தேவையும் ஹெல உறுமயவுக்கு இருக்குமானால் அவர்கள் எம்மோடு இணையலாம்.
நாட்டின் ஜனநாயகத்துக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தி, நல்லாட்சியை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம். அதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும் அவர் குறி்ப்பிட்டார்.
.jpg)
Post a Comment