திருமணம் செய்தால் மனைவி, பிள்ளைகளுக்கு அரசினால் ஆபத்து ஏற்படக்கூடும் - ரஞ்சன் ராமநாயக்க
திருமணம் செய்து கொண்டால் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தினால் ஆபத்து ஏற்படக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு இந்த பதிலைத் தெரிவித்துள்ளார்.
மரண விராந்து இருக்கின்ற என்னைப் போன்றவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறான சர்வாதிகார மோசமான அரசாங்கமொன்று ஆட்சி செய்யும் நிலையில் திருமணம் செய்து கொள்ள முடியாது.
நான் திருமணம் செய்து கொண்டால் எனது பிள்ளைகளை அரசாங்கத் தரப்பினர் கடத்துவார்கள்.
எனது மனைவியை மிரட்டுவார்கள். சிறையில் அடைப்பார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்யவும் சாத்தியம் உண்டு.
நரேந்திரமோடி, அப்துல் கலாம், டட்லி சேனாநாயக்க போன்றவர்கள் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் என்ற போதிலும் தோல்வியடைந்த மனிதர்கள் அல்ல. திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுதான் வெற்றியாளராக இருக்க வேண்டுமென்பதில்லை.
இரத்தினபுரியில் பொலிஸ் உத்தியோகத்தரினால் தாக்குதலுக்கு இலக்கான பெண் தொடர்பில் எனது நிலைப்பாடானது, உண்மையில் நாட்டில் நீதியின் தன்மை முற்று முழுதாக சீர்குலைந்துள்ளது.
எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றன. பல்வேறு வழக்குகள் தொடரப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் பொய் சொன்னால் வழக்குத் தொடரப்படும்.
எனினும் இந்த அரசாங்கம் உண்மையைச் சொன்னால் சிறையில் அடைக்கின்றது.
இந்த கருத்தின் மூலம் நான் நீதிமன்றத்திற்கோ நீதவான்களுக்கோ களங்கம் ஏற்படுத்த நினைக்கவில்லை.
நான் நீதிமன்றத்தையும் நீதவான்களையும் மதிக்கின்றேன். நான் நாடாளுமன்றில் கோமாளித்தனம் செய்கின்றேனா என்பதனை மக்களே தீர்மானிக்கின்றோம்.
ஆளும் கட்சியின் இணைப்பாளர்கள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேரம் பேசி வருகின்றார்கள். பணம் தருவதாகவும் அமைச்சுப் பதவி தருவதாகவும் கூறி கட்சித் தாவுமாறு கோருகின்றனர்.
கட்சி தாவுவேனா இல்லையா என்ற கேள்விக்கு, நான் மரணிக்கின்ற வரையில் காத்துக் கொண்டிருந்துதான் உங்களுக்கு பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அரசியலில் மூளையைப் போன்றே உடல் பலமும் அவசியமாகின்ற தருணமிது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment