அரசின் தேவையை நிறைவேற்றும், பொதுபல சேனாவும், ரவூப் ஹக்கீமும்- சாடுகிறது JVP
ஹக்கீமும் பொதுபல சேனாவினரும் அரசின் இருப்பிற்காக இனவாத மதவாதக் கருத்துக்களை நாட்டிற்குள் தூண்டுகின்றனர்.எனவே, இவர்களது நாடக அரங்கேற்றத்திற்கு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது எனத் தெரிவித்த ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்த இனவாத அரசுக்கு எதிராக பொது மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரில்வின் சில்வா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
பொதுபல சேனா தேரர்மார்கூறும் கருத்துக்கள் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அந்த அமைப்பின் பின்னணியில் அரசாங்கமும் பலமுள்ள ஒரு சக்தியுமே இயங்குகின்றன. அச் சக்தி ஆட்டுவிக்கின்றது. எனவே தான் பொதுபல சேனா எதைச் செய்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
அரசின் இருப்பிற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் பொது பல சேனா ஊடாக அரசாங்கம் மதவாதத்தை தூண்டுகிறது. யுத்தம் முடிந்த நாட்டில் மீண்டும் இனங்கள் மதங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தி அதனை தமது அரசியல் நகர்வுகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசு முயற்சிக்கின்றது.
மறுபுறம் நீதி அமைச்சராக பதவி வகிக்கும் ஹக்கீமும் அரசின் தேவையை நிறைவேற்றுகின்றார். அவர் இனவாதம் மதவாதம் பேசி முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் அரசியல் ஏமாற்றுவித்தையை முன்னெடுக்கின்றார். எனவே, ஹக்கீமும் பொது பல சேனாவும் அரசின் தேவைகளை புரிந்துணர்வோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த உண்மையை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இனவாத மதவாத சக்திகளின் பொறியில் சிக்கிவிடாது இன மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்தோடு, இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஓரணியில் திரள வேண்டுமென்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
Post a Comment