Header Ads



ஜெனீவா தீர்மானத்திற்கு முன்னரே இலங்கையில் இன சமூகங்களுக்கிடையில் பிளவு காணப்படுகிறது - அமெரிக்க தூதுவர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படவில்லை என அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே சிசன் தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமாக இலங்கையில் மிக நீண்ட காலமாகவே இன சமூகங்களுக்கு இடையில் பிரிவினை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் ஐக்கியத்தை வலியுறுத்தியே இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பொறிமுறைமையின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக மட்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிரியா, பர்மா, லிபியா, மாலி, ஹெய்டி, தென் சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பபட்டிருந்தது என சிசன் குறிப்பிட்டுள்ளார். Gtn

No comments

Powered by Blogger.