யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் வெளியேற்றிய முஸ்லிம், சிங்கள மக்களை குடியமர்த்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது
யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள - முஸ்லிம் மக்களைக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவ்வாறு அவர்கள் குடிய மர்வதை யாழ்ப்பாண மக்கள் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாணத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது மக்களின் விசுவாசமும் நம்பிக்கையும் இருக்கும் வரை எம்மை எந்தவொரு சக்தியாலும் மாற்ற முடியாது. மக்கள் வழங்கிய ஆணை யின்படி 2016 ஆம் ஆண்டு வரை நாமே ஆட்சியிலிருப்போம்.
சில சக்திகள் இந்த நாட் டில் இரத்தம் சிந்திய கடந்த காலத்தை மீளவும் உருவாக்க விரும்புகின்றனர். அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்பட அனுமதிக்கப் போவதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. இதனை வடபகுதியின் சில அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர். ஆனால் யாழ்ப்பாண மக்கள் எதிர்க்கவில்லை. இந்ந நாட்டில் யாரும் எந்தப் பகுதியிலும் வாழ்வதற்கான சுதந்திரம் உள்ளது என்றார் ஜனாதிபதி.

Post a Comment