காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க உதவுங்கள் - மலேசியா வேண்டுகோள்
காணாமல் போன பயணிகள் விமானத்தை தேடும் பணிகளுக்கு உதவி வழங்குமாறு சர்வதேச நாடுகளிடம் மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணிகளில் தற்போது 25 நாடுகள் ஈடுபட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய ஆசியக் கடற்பகுதி தொடக்கம் இந்து சமுத்திரத்தின் தென்பிராந்தியம் வரை விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிகவும் கடினமான தேடுதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பேக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.
விமானம் கையகப்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து விமானப் பணியாளர்கள், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் குறித்து ஏனைய நாடுகளின் ரேடார்களில் பதிவான தரவுகளை பெறுவதற்கு விசாரணையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கேர்கிஸ்தான், டேர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, சீனா, மியன்மார், லாவோஸ், வியட்நாம், இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடம் இது குறித்து தொடர்புகொண்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் செய்மதித் தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகள், தரைவழி தேடல் வசதிகள், கடல் மற்றும் விமான உதவிகள் அடங்கலாக விமானத்தை தேடுவதற்கான உதவிகளை வழங்குமாறு இந்த நாடுகளிடம் மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது.
விமானி மற்றும் உதவி விமானி ஆகியோரின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோ நிலை குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment