'முஸ்லிம் நாடுகளில் மிக மோசமாக செயற்பட்ட அமெரிக்கா, இலங்கையை சீண்டக்கூடாது'
(Vi) சர்வதேசத்தின் அவசரத்திற்காக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. அதேபோல் இலங்கையை சீண்டிப்பார்க்கும் செயற்பாட்டினை சர்வதேசம் உடனடியாக கைவிட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் எம்மால் முடிவுகளை எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை பரிந்துரையொன்றினை சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளதென சர்வதேசம் குற்றம் சுமத்தினாலும் அதற்கான உண்மையான ஆதாரங்கள் எவராலும் நிரூபிக்கப்படவில்லை. இன்று இலங்கையில் அமைதி நிலவுகின்றது. இலங்கைக்குள் எவ்வித தீவிரவாதமும் இல்லை. இவை தொடர்பிலேயே சர்வதேச நாடுகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல் இராணுவத்தினால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்வதேச நாடுகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் குரல் கொடுக்கின்றனர். ஆனால், விடுதலைப்புலி தீவிரவாதிகளினால் கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பில் ஏன் எவரும் அக்கறை காட்டவில்லை. நாட்டை சீரழித்து முப்பது வருட காலமாக நாட்டில் பொருளாதார ரீதியிலும் ஏனைய அபிவிருத்தி செயற்பாட்டிலும் தடையாக செயற்பட்ட விடுதலைப் புலிகள் இன்று நல்லவர்களாகவும் நாட்டையும் பொது மக்களையும் காப்பாற்றி இன்று நாட்டிற்காக உயர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்கள் குற்றவாளிகளாகவும் மாறிவிட்டனர்.
கடந்த காலங்களில் முஸ்லிம் நாடுகளில் அமெரிக்க இராணுவத்தினர் மிகவும் மோசமான வகையில் செயற்பட்டனர். அவை தொடர்பில் ஆதாரங்களும் உள்ளன. ஆனால், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவோ, நவநீதம்பிள்ளையோ குரல் கொடுக்கவில்லை. இன்று வரையில் மத்திய கிழக்கில் பல நாடுகளில் மோசமான யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் அமைப்பிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகள் உண்மையில் பொது மக்கள் மீதான அக்கறையா? அல்லது புலம்பெயர் அமைப்புகளின் கறுப்புப்பணத்தின் செயற்பாடா என்பதில் சந்தேகமே உள்ளது.
இலங்கையின போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றது. எனினும், சர்வதேச அமைப்புகளின் அவசரத்திற்காக எம்மால் உடனடி அறிக்கைகளையோ அல்லது தகவல்களையோ சமர்ப்பிக்க முடியாது. முழுமையான சரியான விசாரணை வேண்டுமெனில் கால அவகாசம் தேவை. இலங்கை விடயத்தில் அந்நிய சக்திகள் தலையிடுவதால் எம்மால் அவர்களை அனுசரித்துப் போகவோ அல்லது அவர்களுக்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தினால் முடிவெடுக்கவோ முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக சர்வதேச சக்திகள் இலங்கை விடயத்தில் தலையிடவோ, சீண்டிப்பார்க்கவோ கூடாது. அவ்வாறு செயற்படுவதானது இலங்கையின் அமைதியினை சீர்குலைக்கும் விடயமாகும்.
அதேபோல் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றது. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சர்வதேசம் எமக்கு சொல்லிக் கொடுக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment