இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் சவூதி அரேபியாவுடன் உடன்படிக்கை
(Vi) சவூதி அரேபியாவுக்கு செல்லும் இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் அந்நாட்டுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் இருதரப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியதுவம் பெற உள்ள இந்த ஒப்பந்தம் மூலம் சவூதிக்கு செல்லும் எமது நாட்டு பணிப்பெண்களின் 80 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 05-12-2013 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் 18 இலட்சத்துக்கும் அதிகமானோர் தொழில் புரிகின்றனர். இவர்களில் 90 வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகின்றனர். எனினும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக தற்போது பெண்களை விட ஆண்களே அதிகம் செல்கின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கும் சவூதிக்கும் இடையில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இருதரப்பு உடன்படிக்கை ஜனவரியில் கைசாத்திடப்படவுள்ளது. இதில் முக்கியமாக பணிப்பெண்களின் கடவுச்சீட்டு பணிப்பெண்களிடமே இருக்கவேண்டும் என்பது இக் கைச்சாத்தில் இடம்பெற உள்ளது. மேலும் இவ் உடன்படிக்கையில் பல விடயங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதால் 80 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும். மேலும் பணிப்பெண்களாக வேலைக்கு செல்லும் பெண்களின் வயது எல்லைகளும் அதிகரிக்கப்பட்டும் எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment