Header Ads



நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் காலமானார்


தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) ஜோஹனஸ்பெர்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறந்தார் என்று தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் சூழ்ந்திருக்கையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.  இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்துள்ளது.

மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 8:50 மணியளவில் மண்டேலாவின் உயிர் பிரிந்துள்ளது.

வாழ்க்கை குறிப்பு-

1918 - கிழக்கு கேப்பில் பிறந்தார் .

1943- ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

1956- தேசத்துரோகக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகப் பதியப்பட்டது, ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன .

1962- கலவரத்தைத் தூண்டியது, கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறியது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை .

1964- நாசவேலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார்.

1990- சிறையிலிருந்து விடுதலை .

1993-- அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படுகிறது .

1994- தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

1999- தென்னாபிரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து விலகுகிறார்.

2001- ப்ரொஸ்டேட் புற்றுநோய் தாக்கியது.

2004- பொதுவாழ்விலிருந்து விலகுகிறார்.

2005- தனது மகன் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் தொடர்பான உடல்நலக்குறைவால் இறந்ததாக அறிவிப்பு.

No comments

Powered by Blogger.