Header Ads



இலங்கை சமூகம் கண் குருடான ஊமை சமூகமாக மாறியுள்ளது - அத்துரலியே ரத்ன தேரர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மதுவுக்கு முற்றுப் புள்ளி என்ற கொள்கையை முன்வைத்து தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெற்று கொண்டதாகவும் எனினும் அது தற்பொழுது வெறும் மாயையாகி விட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக சக்திகளை விட அரசாங்கத்திற்குள் இருக்கும் பல் தேசிய நிறுவனங்களின் பணம் பலம் வாய்ந்தது. இதனை தோற்கடிக்க பாரியளவில் மக்கள் அணித்திரள வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மதுவுக்கு முற்றுப்புள்ளி வைப்பது சம்பந்தமாக பேசினாலும் அதற்கு எதிரான முறையில் கசிப்பு உற்பத்தியை பதிவுசெய்யப்பட்ட தொழிலாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

கசிப்பு உற்பத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தின் திறைசேரியில் பணம் இல்லாததால் கசிப்பு உற்பத்திக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க தயாராகி வருகின்றனர்.

கிராமத்திற்கும் கசிப்பு அனுமதிப்பத்திரம் என்ற விடயம் தற்பொழுது சமூகத்திற்குள் வந்துள்ளது. நாட்டில் குறைந்தது 14 ஆயிரம் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் பதிவுசெய்ய சரத் அமுனுகம முயற்சிக்கின்றார். சரத் அமுனுகமவின் அமைச்சு பதவி கார்ட் போட் மட்டைக்கு ஒப்பானது. பி.பீ. ஜயசுந்தரவே உண்மையான நிதியமைச்சர். அத்துடன் இலங்கை சமூகம் கண் குருடான ஊமை சமூகமாக மாறியுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவிற்கு எதிர்க்கட்சிக்கு செல்லும் தேவையில்லை. தற்பொழும் எமது கட்சி எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றது. அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு எதிர்க்கட்சியாக செயற்படும் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்பாக இருக்க முடியும்.

எனினும் கசிப்பு உற்பத்திக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தில் இருந்து கொண்டு எதிர்காலத்தில் என்னால் தர்ம போதனைகளை நடத்த செல்ல முடியாத நிலை ஏற்படலாம் என்றார்.

No comments

Powered by Blogger.