எமக்கு ஷரிஆ வேண்டாம், பள்ளிவாசல்கள் தேவையில்லை - கிரீஸில் இனவாத போராட்டம்
(Tn) கிரீஸ் தலைநகர் ஏதன்ஸில் அரச நிதியில் முதல் பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு எதிராக தீவிர வலதுசாரி தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு கட்டுமான பணிகள் இடம்பெறும் பகுதிக்கு பேரணியாக சென்று தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
ஏதன்ஸ் நகரில் முதலாவது பள்ளிவாசலை கட்ட கிரீஸ் அரசு 1.3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. எனினும் உள்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்துள்ளது. இந்த செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கன்னியாஸ்திரிகர்கள் போல் உடை அணிந்து பங்கேற்றதோடு, அனைவரும் கிரீஸ் தேசிய கொடியை அசைத்தவாறு பேரணியாக சென்றனர். இதன் போது, “எமக்கு ஷரிஆ வேண்டாம், எமக்கு கிரீஸ் வேண்டும்”, “பள்ளிவாசல்கள் தேவையில்லை, பாடசாலைகள் கட்ட நிதி வழங்கு” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
மத நிலையம் ஒன்றை அமைப்பது ஏற்க முடியாதது. நாடு நிதி நெருக்கடியில் சிக்க காரணமான குடியேற்றவாசிகளின் மதத் தேவையை நிறைவேற்றும், அரச செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்னொயில் கொன்ஸ்டங் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் இஸ்லாமிய பள்ளிவாசல் மற்றும் அடக்கஸ்தலம் இல்லாத ஒரே தலைநகர் ஏதன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீஸின் துருக்கி எல்லையில் இருக்கும் தித்ராஸ் பகுதியிலேயே ஒரே ஒரு பள்ளி வாசல் உள்ளது. இங்கு சுமார் 100,000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

Post a Comment