பொது பலசேனா காலக்கெடு விதித்திருப்பதை பொருட்படுத்த தேவையில்லை - பெளசி
(எம்.எஸ். பாஹிம்) ஹலால் விவகாரம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் குழு 19-02-2013 பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடுகிறது.
ஹலால் சான்றிதழ் விவகாரம் உட்பட அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிரி விக்கிரமநாயக்கவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆளும் தரப்பிலுள்ள கட்சித் தலைவர்கள் உள்ளடங்கிய இந்தக் குழு இன்று கூடி தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதிச் சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினை பூதாகரமாக முன்னர் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஹலால் சான்றிதழ் வழங்குவதை நீக்க பொது பலசேனா அமைப்பு காலக்கெடு விதித்திருப்பதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று கூறிய அவர் சகல பிரச்சினைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படும் என்றார்.

Post a Comment